"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Sunday, January 05, 2014

தொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன?

எவனால் மட்டுமே உலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி- துவங்குகிறேன்

 ஆயிரம் நிகழ்வுகள் அன்றாடம் நம் வாழ்வில் வந்தாலும், பிரச்சனை, துயரம், ஏமாற்றம், இயலாமை... போன்ற சோக நினைவுகள் மட்டுமே நம் மனதில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. உண்மையாகவே, இன்பங்களை விட துன்பங்களே நம் வாழ்வின் பெரும் பகுதியை ஏன் ஆக்ரமிக்க வேண்டும்? அதிலும், அடுத்தவரை விட நமக்கே அதிக பிரச்சனை ஏற்பட என்ன காரணம்? மார்க்க புரிதலில் உளவியல் ரீதியாய் ஒரு பதிவு தொடருங்கள் சகோஸ்...

"அல்லாஹ்வை வணங்குதல்" என்ற அடிப்படை கோட்பாட்டிற்காகவே நமக்கு இவ்வுலக வாழ்வு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் தொடரும் முன்னர் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்...

அல்லாஹ் : "நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது எது?இப்லிஸ் : "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்"
இந்த உரையாடலின் முடிவில்

இப்லிஸ்: என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!"
அல்லாஹ் : "நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;" இப்லீஸ் :"என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.

  1. அல்லாஹ்வை வணங்கி வாழ்வதற்காக - அதை சார்ந்த வாழ்வியல் நடவடிக்கைகள் ஒருபுறம்.
  2. அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் தூரப்படுத்தும் சைத்தானின் செயல்கள் மறுபுறம்.
இந்த இரண்டிற்கும் மத்தியிலே எவருடைய வாழ்வும் இயங்கிக்கொண்டிருக்கிறது. சைத்தானும் அல்லாஹ்விற்கு மனிதனை மாறு செய்ய வைத்தாக வேண்டும். அதே நேரத்தில் அல்லாஹ் நமக்கு கொடுத்த வாக்குறுதிக்காக நாமும் சைத்தானிற்கு மாறு செய்ய வேண்டும் .
இந்த சுழற்சி நிலை கியாம நாள் வரை தொடர்ந்தே ஆகவேண்டும். கைர், விசயத்திற்கு வருவோம்.

அல்லாஹ்விடமிருந்து நம்மை அப்புறப்படுத்துவதே சைத்தானின் தலையாய மற்றும் ஒரே வேலை. அதற்காக அவன் பல வழிகளை கையாளுகிறான்.
முதன்மையாக, அல்லாஹ்வை வணங்குவதை விட்டு நம்மை திருப்புவது.
உலகியல் கேளிக்கைகளில், பொழுதுப்போக்கு எனும் பெயரில் நேரங்களை வீணடிக்கச்செய்து இறைவனின் பக்கம் நெருங்குவதை சைத்தான் தடை செய்கிறான். சுமார் 75 சதவீகித மக்களை சைத்தான் இந்த வழிகளில் மிக இலகுவாக ஏமாற்றி விடுகிறான்.

முதல்வழி பயனளிக்காதபோது மீதமுள்ள 25 சதவீகித மக்களை வழிக்கெடுக்க சைத்தான் தனது அணுகுறையை மாற்றுகிறான். அல்லாஹ்வை வணங்குவதை தவிர்க்க மனித மனங்களில் அல்லாஹ்வின் அருளின் மீதான நிராசையே ஏற்படுத்த வேண்டும். அதற்கு என்ன வழியோ அதை சைத்தான் இங்கே கையாளுகிறான்.

எந்நிலையிலும் வணங்குவதலை நாம் கைவிடா போது, இறைவனுக்கும் நமக்குமிடையே இடைவெளியே அதிகமாக்க வாழ்வியலில் அதிக குறுக்கீடை ஏற்படுத்துகிறான். உதாரணமாக குடும்ப உறவுகளில் பிரச்சனை, வேலையின்மை, வறுமை, பிணி, கடன், மரணம், இப்படி ஒன்றன்பின் ஒன்றாகவோ இல்லை எல்லாவற்றையுமே அவரவர் மன உறுதிக்கு தகுந்தார்ப்போல் ஏற்படுத்துவான்.

இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கிய விசயம். "நம் ஈமானின் உறுதிக்கேற்பவே சோதனைகளும் இருக்கும்". ஏனெனில் சோதனைகள் நமது வாழ்விற்கான பரிட்சை. பரிட்சை எனும் போதே நம் தேர்ச்சிகேற்பவே கேள்விகளின் தரமும் உயரும். ஆக சைத்தான் நமக்கு உருவாக்கும் முதல் சோதனையில் நாம் வெற்றியை தழுவினால் அடுத்த கட்டத்தில் அதை தாண்டிய சோதனையோடு காத்திருப்பான்.

இன்னும் எளிதாக நம் வாழ்வியல் நடைமுறையிலிருந்தே இதை விளக்கலாம். ஒருவர் திருடுகிறார் என வைத்துக்கொள்வோம். அல்லாஹ் ஹராமாக்கியும் சைத்தானின் தூண்டுதலினால் செய்கிறார். இந்த இடத்தில் வாழ்க்கை பாடத்தில் தோல்வி தழுவுகிறார். சைத்தான் வெற்றி பெறுகிறான்!
முதற்கட்ட தேர்விலே தோல்வி தழுவிய அவர் அடுத்த கட்ட தேர்வுக்கு போக தகுதியற்றவர். அந்தளவிலே சைத்தானின் ஆதிக்கம் அவர் மீது நிறைவடைகிறது. ஆக, அடுத்த சோதனைகள் அவருக்கு தேவையில்லை

அதே இப்படி வைத்துக்கொள்வோம். திருடக்கூடிய ஒருவர் தன் செயல் தவறென  உணர்ந்து அல்லாஹ்விற்காக அதிலிருந்து விலக முற்படுகிறார். சைத்தானின் சூழ்ச்சி அங்கே தோல்வியை தழுவுகிறது. ஆக அவனை வீழ்த்த முன்னை விட வீரியமாக அடுத்தக்கட்ட சூழ்ச்சியில் செயல்பட்டாக வேண்டும் சைத்தான்.

இப்படி சைத்தான் ஒவ்வொன்றாய் ஏற்படுத்த ஏற்படுத்த மனிதன் ஈமானின் பலத்திற்கு தகுந்தார் போல் தேர்ச்சிப்பெற்று வருகின்றான். எல்லாவற்றையும் தாண்டி ஒருவர் முழு ஈமானுடன் பயணிக்கும் போது நிச்சயம் அவருக்கான அடுத்தடுத்த சூழ்ச்சியோடு சைத்தான் வழி நெடுக்க காத்திருப்பான்.

எந்த கட்டத்தில் மனிதன் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைக்கிறானோ சைத்தானின் வலைப்பின்னலில் சிக்கிக்கொள்கிறான். அத்தோடு அங்கே கேம் ஓவர்..!

 "அல்லாஹ்விற்காக ஹலால்- ஹராம் பேணியும் உங்கள் வாழ்வில் பிரச்சனைகளும், சோதனைகளும் தொடர்கிறதென்றால் அறிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஈமானை காத்துக்கொள்ள சைத்தானுடன் போரிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்". இது உங்களின் முடிவு நாள் வரையிலும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும்.

உங்களின் பிரச்சனைக்கான அடிப்படை காரணங்களை என்னவென்பதை கண்டறியுங்கள். எப்படி முயன்றும் சரி செய்ய முடியவில்லையென்றால் அல்லாஹ்விற்காக பொறுமை காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது தான் சைத்தான் தோற்கும் இடம். மாறாக உலகில் எல்லோருக்கும் இருக்க எனக்கு மட்டும் ஏன் இந்த அளவு சோதனை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது என உங்கள் உள்ளத்தில் ஊனத்தை ஏற்படுத்தாதீர்கள்.



ஏனெனில் உலகில் இருக்கும் எல்லோரையும் விட அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறான். சைத்தானுக்கு எதிராக... இன்றே அல்லாஹ் நாடி உங்களின் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடினும் நாளைய பொழுதில் புதிய பிரச்சனை உங்களுக்காக காத்திருக்கும். சைத்தானுடன் போரிடுவதற்காக மறவாதீர்கள்!

இத்தகைய தருணங்களில் அல்லாஹ்வின் புறமே சார்ந்திருங்கள். சாதரண நாட்களில் 5 வேளை மட்டும் தான் தொழுகிறீர்கள் என்றால் இதைப்போன்ற இக்கட்டான தருணங்களில் கூடுதலாக அமல்களை அதிகப்படுத்துங்கள். ஏனெனில் அல்லாஹ்வை நினைவு கூறுவதே மனித மனங்கள் அமைதி அடைவதற்கு சிறந்த வழியாக குர்-ஆன் இயம்புகிறது. 

மாறாக அவனது அருளில் நிராசைக்கொண்டு சைத்தானின் சூழ்ச்சிக்கு இரையாகி விடாதீர்கள். பின்பு நீங்களும் வாழ்வியல் தேர்வில் தோல்வியே தழுவ நேரிடலாம். அல்லாஹ் காப்பாற்றட்டும்...

இந்த நேரத்தில் இன்னொரு விசயத்தையும் நாம் உணர்ந்தாக வேண்டும். தொழுவதும், நோன்பு பிடிப்பதும் இன்னபிற அமல்கள் செய்வதும் நமது சுய ஒழுக்க பேணுதலுக்காகவும். அல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைக்காகவும் தான். அமல்கள் செய்வதால் நூறு சதவீகிதம் நமக்கு சோதனைகள் வராது என்று அல்லாஹ் எங்கும் உத்திரவாதம் அளிக்கவில்லை. 

அப்படி இருப்பீன் பள்ளிவாசலே கதி என்று கிடப்போருக்கு மட்டுமே எல்லா வளமும் கொடுத்திருப்பான். ஆனால் இன்று அல்லாஹ்வை மறுப்பவனும்- மறப்பவனும் பொதுவாழ்வில் செழித்திருப்பதை நாம் காணலாம். ஆக சோதனைக்கும் - அமல்களுக்கும் மத்தியில் செல்வத்திற்குண்டான தொடர்பை அல்லாஹ் இவ்வுலகில் பொதுப்படுத்தியதை இதை விட நிதர்சனமாக விளக்க தேவையில்லையென நினைக்கிறேன்.


ஏனெனில் யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான். என்ற நபிமொழியும் உண்டு
இன்பமும்- துன்பமும் மாறிமாறி வந்த போதிலும் துன்பத்தை மட்டுமே நம் மனது பெரிதாக நினைக்கிறது. காரணம்??? உளவியல் ரீதியாய் அங்கு தான் தவறிழைக்கிறோம்! அல்லாஹ் அளித்த நிஃமத்துகள் A4 size வெள்ளை காகிதம் போல. ஆனால் சைத்தானின் சூழ்ச்சியால் ஏற்படும் தீங்குகளும் பிரச்சனைகளும். அதன் மீது அங்காங்கே வைக்கப்படும் கரும் புள்ளிகள் போல., 

அல்லாஹ்வின் அருள் எனும் பரந்த பெருவெளியில் சிறு கரும்புள்ளிகளாய் காட்சியளிக்கும் சைத்தானிய சூழ்ச்சிகளான துயரங்கள் நம் வாழ்வில் பளிச்சென தென்படுகின்றன. 

பிரச்சனைகள் என்பது காற்றடைக்கப்பட்ட பிரம்மாண்ட பலூன்கள் போல தான். பார்க்க தான் பெரிதே ஒழிய உள்ள ஒரு மேட்டரும் இருக்காது. இன்னும் அத்தகைய பிரம்மாண்ட நிலையும் தொடர்ந்திருக்காது.. நாட்கள் ஆக ஆக சுருங்கி.. நம் கைக்குள் அடங்கியும் விடும். 

பார்க்கும் கோணங்கள் தான் நமக்கு எதையும் பெரிதுப்படுத்தி காட்டுகிறது.

அடுத்தவருக்கு இந்த அட்வைஸ் எல்லாம் ஓகே தான். ஆனா நமக்குன்னு வரும்போது மனதால் ஏற்க முடிவதில்லையே என யாரெனும் எண்ணலாம்- எண்ணத்தான் செய்வோம். 

அதுதான் மனிதனின் சராசரி மன நிலை., எல்லோரையும் போல நாமும் பிரச்சனையின் போது மன உளைச்சலுக்கு ஆளானால் நம்மிடம் இருக்கும் ஈமானுக்கு என்ன அர்த்தம் கொடுப்பது.? நம்முடைய ஈமான் இங்கே தான் எடை போடப்படுகிறது.

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? என வான் மறையில் நம்மை நோக்கி கேட்கிறான் வல்லோன்

எதுவாயினும் அல்லாஹ்விடம் முறையிடுங்கள், அவனிடம் பிரச்சனையை முன்னிருத்தி அழுதும் கொள்ளுங்கள். ஆனால் நிராசை அடைந்து வீடாதீர்கள்.
ஏனெனில் "தமக்கென' வரும்போது

  • இப்ராஹூம் நபி நெருப்பு குண்டத்தில் விழ பயப்படவில்லை,
  • இஸ்மாயில் நபி அறுபடவும் தயங்கவில்லை.
  • பிர்-அவ்னின் மனைவியும் அநியாயத்திற்கு கீழ்ப்படியவில்லை
  • அண்ணலோ எதற்கும் கலங்கவில்லை.,
இன்னும்...

  • பிலால் - பாலை மணலில் பாறை சுமையில் அல்லாஹ்வை விட்டு நிராசை அடைந்து விடவில்லை...
  • அபு பக்ரும் அண்ணலுக்காக தான் கொண்ட துயரால் அல்லாஹ்வை நிராசை அடைந்து விடவில்லை
  • உஸ்மான் - வீட்டிலே சிறைப்படுத்த போதும் அல்லாஹ்வின் மீது நிராசை அடைந்து விடவில்லை 
  • அன்னை சுமையா ரலியல்லாஹ் அன்ஹா பிறப்புறுப்பில் ஈட்டியால் குத்தப்பட்டபோதும் அல்லாஹ்வின் மீது நிராசை அடையவில்லை..
இவர்களெல்லாம் அல்லாஹ்வை நேரடியாக பார்த்து ஈமான் கொண்டவர்களா என்ன ..?  இன்னும் ஆயிரமாயிரம் உத்தம சஹாபிகள் வாழ்வில் சந்தித்த பெரும்பொழுது துயரங்களெல்லாம் ஆயிரம் இறை வசனங்கள் கூட வந்திறங்கிடாத காலம். இப்போது சொல்லுங்கள் அவர்கள் சந்தித்த துயர தருணங்களை விடவா 21ம் நூற்றாண்டில் நாம் அதிமாக சந்தித்துக்கொண்டிருக்கின்றோம் ?

இறுதியாக...

பிரபலமான ஹதிஸ் ஒன்று, வலிப்பு நோய் மிகுந்த ஒரு சஹாபிய பெண்மணி அண்ணலிடம் வந்து என் நோய் தீர துஆ செய்யுங்கள் என கேட்க அண்ணலார் " தாரளமாய் துஆ கேட்கிறேன் அல்லாஹ் நாடினால் அந்த நோயை போக்கிடுவான். ஆனால அதற்கு பகரமாக உன் மறுமைக்காக துஆ கேட்கவா என்கிறார்கள். எது நிரந்தரமானது என்பதில் தெளிவு கொண்ட அந்த பெண்மணி என் மறுமைகாகவே கேளுங்கள் என்றார். கூடவே ஒரு கோரிக்கையும் வைக்கிறார் " 


நான் வீதியில் நடக்கும் போது திடிரென வலிப்பு வந்து தன்னிலை மறந்து கீழே விழுந்து விடுகிறேன். அப்போது என் ஆடைகளெல்லாம் களைந்து விடுகிறது. நினைவு திரும்பி பார்க்கையில் எனக்கு வெட்கம் மேலிடுகிறது. இனி வலிப்பு வரும் போது ஆடை விலகாமல் இருக்க மட்டும் துஆ செய்யுங்கள் யா ரசூலுல்லாஹ்! என்றார்...


இந்த ஹதிஸ் நம் ஈமானுக்கு ஒரு உரைக்கல்.,


உங்கள் சகோதரன்
குலாம்.


Reference : 
ஸூரத்துல் அஃராஃப் ~12
ஸூரத்துல் ஹிஜ் ~ 36, 37 &39
ஸூரத்துல் பகரா ~214.
புஹாரி~ 5645.
                                                  அல்லாஹ் நன்கறிந்தவன்
read more "தொடரும் சோதனைகள் :- தீர்வு என்ன?"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்