"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Sunday, September 26, 2010

பதில் தருமா பரிணாமம்..?

                                                                        ஓரிறையின் நற்பெயரால்

   மனிதன் படைப்புருவாக்கத்தை குறித்து பல்வேறு இணையங்களில் அவ்வபோது விவாதங்கள் நடைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. 
   எனினும் பரிணாமம் மூலம்தான் மனிதன் உட்பட ஏனைய அனைத்து உயிர்களும் தோன்றின என வாதிடும் நண்பர்கள் அவர்களுக்கு (பரிணாமத்திற்கு) எதிராக கேள்விகள் கேட்கப்படும்போது ஒரு நிலை தாண்டி அக்கேள்விக்கு பதிலாக கடவுளை முன்னிருத்தி பேசுபொருளை திசை திருப்புகின்றனர்.

   அத்தோடு முடிந்து விடுகிறது அதற்கு பிறகு அவர்கள் அடுத்த ஆக்கம் வரை தலை காட்டுவதில்லை.ஏனைய ஆக்கங்களிலும் இதே நிலைதான்...


பரிணாமம் குறித்து எளிய இலக்கணம்:
  
சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம். என்பதே "பரிணாமம்" குறித்த எளிய முன்னுரை

    அதாவது எந்த ஒரு உயிரினமும் தாம் இருக்கின்ற சூழலுக்கேற்றவாறு தன்னை தயார்ப்படுத்தி தன் உணவு,உறைவிடம்,மேலும் தன் சுய தேவை தொடர்பான மூலங்களை செயல்படுத்தி காலப்போக்கில் தன்னையே பிறிதொரு உயிரினமாக தகவமைத்துக் மாற்றிக் கொள்கிறது என்பது ஆகும்.
  
  ஆக எந்த ஒரு உயிரினமும் சங்கிலிதொடர் முறையிலேயே ஏனைய காலகட்டத்தில் பிறிதொரு உயிரினமாக மாறுகிறது (அவ்வாறு ஏற்படும் தன்னிலை மாற்றத்திற்கு நீண்ட காலங்கள் ஆகும் என்பதையும் உடன்பாட்டு அடிப்படையில் ஏற்றுக்கொள்வோம்) அதன் அடிப்படையில் நமக்கு இந்த உயிரின மாற்றம் தொடர்பாக இயல்பாக சில கேள்விகள் பிறக்கிறது., 
  
  •  முதன்முதலில் ஒரு செல் உயிரி மூலம் தான் உலக உயிரினங்களின் வளர்ச்சி ஏற்பட்டதென்றால் எந்த உயிரன மூலத்தின் தொடர்ச்சியாக தாவரங்கள் உருவாயிற்று. அந்த உயிரி தாவரமாக உருமாற்றமடைய கால சூழ்நிலை அவசியமென்ன?

  •        முள்ளம் பன்றிகள் பெற்றிருக்கும் தன் உடலில் முட்களை பரிணாம ரீதியாக எந்த உயிரின மூலத்திலிருந்து பெற்றது?அது வாழும் கால சூழலில் தன்னை பிற உயிரினங்களிருந்து காத்துக்கொள்வதற்காக அஃது உருவானதாக கொண்டால,அந்த இன்றியமையாத பயன்பாடு அவ்வுயிரினம் மூலமாக ஏனைய விலங்குகளுக்கு தொடராதது ஏன்?

  • அதுப்போலவே பச்சோந்தி என சொல்லப்படும் ஓணான் போன்ற ஒருவகை உயிரினம் தேவைகேற்ப தன் தோலின் நிறத்தை மாற்றும் பண்பை எந்த பரிணாக அடிப்படையில் பெற்றுக் கொண்டது? பாதுகாப்பின் அடிப்படையில் தான் அஃது மாற்றமடைவதாக கொள்ளும்போது அதன் இந்த தேவையை ஓணான் போன்ற அதன் கிளை உயிரினம் பெறாதது ஏன்? -இந்த இரண்டு உயிரினமும் வெவ்வேறு கால கட்டங்களில்,கால சூழலில், மாறுப்பட்ட எதிரின விலங்குகளோடு வாழ்பவையல்ல.இரண்டும் ஒன்றாக அதுவும் நம் கண்ணெதிரே உலா வரும் உயிரினங்களே.ஆக சம காலத்தில் வாழும் ஒரே வகையில் இருக்கும் இரு உயிரினங்கள் வெவ்வேறு நிலைகளில் இருப்பது ஏன்? அல்லது இரண்டும் வெவ்வேறு திணை,தொகுதி,வகுப்பு,வரிசை, துணைவரிசை, குடும்பம் கொண்டதாக இருந்தாலும் பச்சோந்தியின் சிறப்பு பண்பை ஓணான் பெறாதது ஏன்?

  •  ஆமைகளுக்கு அதன் பாதுகாப்பு அவசியம் கருதி மேல்புறமாக இருக்கும் ஓடு எந்த உயிரின மூலத்திலிருந்து எந்த சமயத்தில் பெற்றது?

  • தேனீக்கள் தனது அபார சக்தியால் தனது (வீட்டை) கூட்டை அறுங்கோண வடிவில் அதுவும் சற்றும் கோணாலாக இல்லாமல், கணித ரீதியாக அறுகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்பாகும்-இதனை எந்த பரிணாம நிலையின் போது பெற்றது?

  • மேலும் தன் தேவைகேற்ப தேனெடுக்கப் போகும்போது தேன் இல்லாத பூக்களை விடுத்து அதிக தேனுள்ள பூக்களை மிக எளிதாக ,லாவகமாக அவற்றால் எப்படி கண்டறிய முடிகிறது? பகுத்தறிவின் மொத்த உலகமாக வர்ணிக்கப்படும் மனிதனால் அத்தகையே தேனீக்களின் சாதரண செயல்களை செயல் படுத்த முடியாதது ஏன்?

  • ஒரு நல்ல திடமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை.-இந்த நிர்வாக திறனை எந்த கட்டத்தில் பெற்றது,அதன் பின் அதன் மூலம் உண்டான(?) ஏனைய உயிரினங்களுக்கு வீடுகட்டும் ஒழுங்குமுறையும்,திறம்பட செய்ய வேண்டிய நிர்வாக திறனும் தேனீக்கள் போன்று இல்லாமல் போனது ஏன்?

  • ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு, அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது.-தனது கூடு அதிகப்படியான எடையால் விழுந்துவிடாமல் இருக்க இந்த பாதுகாப்பான முன்னேற்பாடு அவ்வுயிர்களுக்கு எப்படி தெரிந்தது?அல்லது கால சூழலுக்கு தகுந்தவாறே தனது நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது எனக் கொண்டால் இந்த வகையில் அமைந்த கூடு கட்டுமானத்திற்கு முன்பாக அதன் கூடுகள் எத்தனை முறை விழுந்துள்ளது அல்லது விழும் என்ற முன்னேச்சரிக்கை உணர்வு அதற்கு எப்படி தெரியும்? 

  • வண்ணத்துப்பூச்சிகள்- அதன் இறக்கைகள் பல்வேறு நிறங்களில் அமைந்திருக்க பரிணாம அடிப்படையில் என்ன காரணம்? ஏனெனில் பரிணாம அடிப்படையில் அதன் இறக்கையின் நிறங்கள் என்பது தேவையில்லாத ஓன்று. பச்சோந்திகள் போல தனது பாதுக்காப்புக்காக வண்ணத்துப்பூச்சிகள் தனது நிறங்களை பயன்படுத்துவதில்லை. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஒரு உயிரினம் தன்னை தகவமைத்துக்கொள்வதே பரிணாமம்- எனும்போது எந்த சூழ் நிலையிலும் தனது இறக்கையின் வண்ணத்திற்கு மூலமான தேவைகளுக்கு அப்பூச்சிகளுக்கு அவசியமே ஏற்படவில்லை.அப்படி வர்ண தேவைகள் அவசியமென்றால் பரிணாம அறிவியலில் அதற்கான ஆதாரம்?

  • அதுவும் அவைகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன அதுவும் வெவ்வேறான வர்ண மூலத்துடன்-? வர்ணங்கள் அழகுக்காவே என்றாலும் (அதுதான் உண்மையும்) கூட எந்த நிலையிலும் ஒரு உயிரினம் தனக்கான அழகை தேர்ந்தெடுக்க முடியாது.அப்படி தானே தேர்ந்தெடுப்பதாக இருந்தால் இன்றளவும் மனிதனால் தன் அழகை தானே தெரிவு செய்ய முடிவதில்லை ஏன்?

  • சிறுத்தைகளுக்கு அதி வேகமான ஓட்டம் இரைப்பிடிப்பிற்காக தன் சுய தேவையின் அடிப்படையில் காலப்போக்கில் ஏற்பட்டதாக இருக்கலாம். ஆனால் தம் உடம்பில் உண்டான(இருக்கும்) கோண வடிவ வர்ண தோற்றத்திற்கு என்ன காரணம்?அதுப்போலவே வரிக்குதிரைக்கும்,ஓட்டகசிவிங்கிகளுக்கும், மான்களுக்கும், புலிகளுக்கும் -தம் உடம்புகளில் இருக்கும் பிரத்தியேக வண்ண அமைப்புகளுக்கு எந்த சூழல் அந்த மாற்றங்களை அவைகளுக்கு ஏற்படுத்தியது?

  • மற்ற பறவைகள் போலல்லாமல் ஆந்தைகளுக்கு மட்டும் மனித முக அமைப்பு இருப்பது ஏன்? அதனை தொடர்ந்த உயிரினங்கள் அத்தகையை இயல்பை பெறாதது ஏன்? 

  • மனிதனை விட 14 மடங்கு அதிகமாக நுகரும் சக்தி கொண்ட பூனைகளுக்கு பார்வையின் மூலம் வண்ணங்களை பிரித்தறிய முடியாமல் நிறக்குருடு தன்மையே பெற்றிருப்பது ஏன்? ஏனெனில் பரிணாமத்தின் மூலம் தன் சுய தேவை அடிப்படையில் தன்னின நிலையில் வளர்ச்சி பெறுவதே சாத்தியம்,ஆனால் இங்கு ஏனைய உயிரினங்களின் நிலைகளை தாங்கி உருவாகும் ஒரு உயிர் அதன் இயல்பை ஒத்து வளர்ச்சி பெற வேண்டும்.ஆனால் இங்கு பூனை என்ற ஒரு விலங்கு ஏனைய உயிரினங்களின் நிலை தாங்கி மெல்ல மெல்ல மாற்றமடையும்போது பார்வை அடிப்படையில் நிறக்குருடு எனும் குறைப்பாட்டை தன்னகத்து கொண்டு உருவாகிறது, இது எதன் அடிப்படையில் சாத்தியம்? அவ்வாறு நிறக்குருடு அடைவதற்கு கால,சூழல் பரிணாம பிண்ணனி என்ன?

  • நண்டு எனும் நீர் வாழ் உயிரினம் எந்த உயிரின தோற்ற வளர்ச்சியின் விளைவாக வித்தியாசமான கூட்டுக்கண்கள் அமைப்பை பெற்றுள்ளது? 

  • சிலந்தி தன் இரைக்காக தனது தன் உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் வீடு (நூலாம் படை) கட்டுவது தன் சுய தேவை அடிப்படையில் என்பது ஏற்புடையது.ஆனால் அவ்வாறு உருவாக்கிய தம் வீடு மிக மெல்லிய இழையாக இருந்த போதிலும் தான் மட்டும் அந்த சிக்கல் வழியாக இலகுவாக செல்வதற்கும்,அவ்வீட்டின் எடை அச்சிலந்தியின் எடையே விட மிக சொற்பான இருந்தாலும் எடை கணத்தால் ஒடிந்தோ,விழுந்தோ விடாமல் இருக்க எந்த கால சூழலில் அல்லது எந்த பரிமாண வளர்ச்சி கட்டத்தில் எந்த கற்றுக்கொண்டது?

  •  ஏனைய எல்லா உயிரினத்தின் தொடர்பில் கடைசியாய் உலா வரும் மனிதன் ஏனைய உயிரினங்கள் போலலல்லாது தாயிக்கும்.தாரத்திற்கும்,மகளுக்கும் வித்தியாசம் உணர்ந்து அஃது மனைவியோடு மட்டும் வீடு கூடும் அந்த திறமையான ஒழுங்க மாண்பை பெற்றது எப்படி? அஃது அவ்வாறு எந்த காலகட்டத்தில் எந்த பரிணாம் வளர்ச்சியின் மூலம் பெற்றான்? அதுப்போல அவனுக்கு இருக்கும் நாணமும்,வெட்கமும் எந்த உயிரின மூலத்திலிருந்து எத்தகைய பரிணாம கால சூழ் நிலை கற்றுக்கொடுத்து?

              மேலே குறிப்பிட்ட விளக்கத்தின் (வினாவின்) படி உயிரினங்கள் ஒவ்வொன்றும் பொதுவான உயிரினங்களின் தொடர்பு அடிப்படை இயல்புகளில் கூட ஒற்றுமையில்லாமல் அவையாவும் தனக்கென்று தனித்தனி சிறப்பியல்புகளுடனேயே அமைய காண்கிறோம்.
   
    எனவே அத்தகையே தனி இயல்புகள் என்பது பரிணாம மாற்றத்தால் எப்படி ஏற்பட்டது என்பதை விட ,ஏற்பட வாய்ப்பே இல்லை என்பது சிந்தனைக்கு உரிய வாதம்.
    
     இப்படி ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு தனித்தன்மை சிறப்பியல்புகளுடன் அமைய வாழ்வதென்பது இவ்வுயிர்கள் பிரத்தியேகமாக படைப்பாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.  எனவே இந்நிலைகளை கடவுள் என்ற சக்தியால் மட்டுமே உண்டாக்க முடியும் என்பதே உண்மை.

                பரிணாமவியலார் கூற்றுப்படி உலகில் முதன்முதலில் தான்தோன்றியான முதல் உயிரின உருவாக்க மூலம் தவிர்த்து அதை தொடர்ந்த ஏனைய உயிரின தோற்றம், வளர்ச்சி படி நிலை ஆகியவற்றிற்கு தெளிவான விளக்கங்கள் பரிணாமவியல் கோட்பாட்டில் இருப்பதாக சான்றுப் பகிர்கிறார்கள்.

    அதன் அடிப்படைப்பில் மேற்குறிப்பட்ட உயிரினங்கள் தாங்கள் கூறும் பரிணாமவியல் ஊடாக வலம் வந்ததற்கு சான்றுகள் இருக்க வேண்டும்.அதுவும் மேலே குறிப்பிட்டவைகள் உயிரினங்கள் ஏதாவது ஒரு உயிரினங்களின் தொடர் வரிசையில் வந்தே ஆக வேண்டும்.

  ஏனெனில் ஆரம்ப நிலை மீன்கள் >தலைப்பிரட்டை >தவளை உதாரணமும், இறுதியாக குரங்கினம்> நியாண்டர்தால் > மனிதன் உதாரணமும் -போன்ற மேற்கோள்கள் பரிணாம் குறித்த உயிரின தொடர்வரிசைக்கு ஆதாரமாக (?) காட்டுகிறார்கள். எனவே மேற்குறிப்பிட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாம வாத சிந்தனை....?

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும்தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை... (6:38)

                                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "பதில் தருமா பரிணாமம்..?"

Tuesday, September 21, 2010

இணையம் சொல்லும் பாடம் (குறிப்பாய் பெண்களுக்கு!)

  அஸ்ஸலாமு அலைக்கும்அளவற்ற அருளாளன் நிகரே இல்லா அன்புடையோன் அல்லாஹுவின் பெயரால் ஆரம்பம் செய்து ...
 சாட் பண்ணுவதை பற்றி கொஞ்சம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த கட்டுரையை அமைக்கின்றேன்..


   இது சரியா பிழையா என விவாதம் பண்ண போனால் விளைவுகள் பாதகமாகவே அமையும் ஆயினும் உண்மை என்னவென்றால் இது தவிர்க்க படவேண்டிய ஒன்று...சாட் பண்ணுவது நேர்முகமாக அல்லாமல் மறைமுகமாக ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பதை போன்றதே..எங்கு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கு மூன்றாவதாக ஷெய்த்தான் வந்துவிடுகிறான்.((நபி மொழி)) 


  
நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் நம் எண்ணங்களில் ஊடுருவியுள்ள ஷெய்த்தான் நல்லவன் இல்லையே! நம்மை வழி தவற செய்வதுதான் அவன் தலையாய நோக்கம்..


       நாம் மார்க்கம் சம்பந்தமான விடயங்கள் தான் பகிர்ந்து கொள்கிறோம் என சொல்லி கொள்பவர்களும் இருக்கின்றனர்.எனினும் எவரின் நம்பகத்தன்மையும் யாரும் அறியமுடியாது.அப்படியிருக்க ஒருவர் நல்லவர் என்று நினைக்கும் அதே நேரத்தில் அவர் கெட்டவராகவும் இருக்க வாய்பிருக்கிறது. மேலும் ஒருவர் மற்ற நபர்களுடன் பொதுபடையாக பழக வேண்டிருப்பதால் முடிந்த அளவிற்கு தன்னை நல்லவனாகவே தான் காட்டிக்கொள்வார். 


   ஆக இணையத்தில் இருப்பவர்கள் ஒன்று நல்லவராக இருக்கலாம்.அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவன் அல்லாஹு ஒருவன்தான்.எப்படித்தான் சகோதரங்கள் என்ற வார்த்தைகளை பிரயோகித்தாலும் உண்மையான சகோதரங்கள் ஆகிவிடாது..மார்க்கத்தில் உடன் பிறவா சகோதரங்கள் என்று ஒன்று இல்லை... 


  வீணான பேச்சுக்கள் தேவையில்லாத விடயங்கள் தவிர்க்க பட வேண்டும்.ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் நம்மால்முடிந்தவரை மற்றவர்களுக்கு நன்மைகளை பெற்று கொடுக்க முயற்சிக்க வேண்டுமே தவிர பாவங்களுக்கு நாம் காரணமாக அமைந்து விட கூடாது.சாட் பண்ணுவது வழி தவறுதல்களுக்கு அழைத்து செல்லுமே தவிர அவற்றால் நன்மைகள் விளைவது மிகவும் குறைவு
  • அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் குறிப்பாக எதிர்பாலினத்துடன் சாட் பண்ணுவதை தவிர்ப்பது சிறந்தது 
  • இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாட் பண்ணுவது தவிர்க்கப்பட வேண்டும்
என் அன்புக்குரிய சகோதரிகளே...!!!


''நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (33;32)'


         நபியின் மனைவிமார்களுக்கே இந்த கட்டளை என்றால் நாம் எல்லாம் எங்கே ?
தயவு செய்து நளினமான பேச்சுகளை தவிர்த்து கொள்ளுங்கள். நண்பன்தானே என்ற நோக்கில் தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொள்வது, புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது. தொலைபேசியில் பேசுவது..இவை எல்லாம் நம் மார்க்கம் கற்றுத்தந்த வழிமுறைகள் அல்ல.என்னதான் நண்பன் , சகோதரன் என்றாலும் அல்லாஹு ஹராம் ஆக்கியது ஹராம் தான் அதை மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை.


அன்புக்குரிய சகோதரர்களே! பெண்களை பாவம் செய்வதற்கு காரணமாக நீங்கள் இருப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் .அவர்களின் பேச்சுகளில் பிழைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கள் அவர்கள் தவறிழைக்கும் வேலையில் கண்டியுங்கள் மாறாக சுதந்திரம்,சம உரிமை எனும் பெயரில் தட்டி கொடுக்காதீர்கள்,ஊக்கபடுத்தாதீர்கள் 


 நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் நாளை நம் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவோம்.அல்லாஹுவின் முன் நாளை நிற்க போவதை எண்ணி அஞ்சி கொள்வோம்.நம் இறைவனிடம் நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் எத்தனையோ சகோதரிகளின் அனுபவமும் அவல நிலையுமே வெளிப்பட்டு இவ்வுண்மைக்கு சாட்சியாக இருக்கின்றது. நாளை மறுமையை அஞ்சி கொள்வோமாக!


சுவனம் எனும் எம் இலட்சிய பயணத்தில் விளையும் இடையூறுகளை இறைவனுக்காக களைவோமாக !
அல்லாஹு நம் அனைவரையும் நேரான வழியில் செலுத்துவானாக !!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்....!!!

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.  (24:21)
                        
                                                          - ருக்கையா அப்துல்லாஹ்
                                                               S R I   L A N G A

read more "இணையம் சொல்லும் பாடம் (குறிப்பாய் பெண்களுக்கு!)"

Saturday, September 18, 2010

இறைத்தூதர்கள் ஏன்?

                                               ஓரிறையின் நற்பெயரால்...

   ஒருவன் கடவுளை மறுப்பதாலோ, ஏற்பதாலோ கடவுளுக்கு எந்த ஒரு நன்மையும்,தீமையும் விளைவதில்லை. மாறாக நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கு ஏற்றவாறு நமக்கே பயன்களும்,தீமைகளும் வந்தடைகின்றன. அதை யாராக இருந்தாலும் கண்கூடாக நடைமுறையில் காண்கிறோம்.

   ஆக கடவுள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் கடவுள் இல்லை என வாதிடுவோர் பரிணாம கோட்பாடு எனும் தியரியை தாண்டி எந்த ஒரு நிருபிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்களையும் இதுவரையும் முன் வைக்கவில்லை.

   இந்த குற்றச்சாட்டை அவர்களிடம் முன்வைத்தால் அவரகள் இதே கேள்வியே கடவுளை நம்புவோரிடமும் முன்வைப்பர். நியாயமானது தான். (எனினும் சாதாரணமாக தர்க்கரீதியாக நடைமுறை வாழ்வில் கூட கடவுள் இல்லை என்பதை நிருபிக்க முடியவில்லை என்பது வேறு விசயம்)

    கடவுளை மறுப்பதற்கு எந்த ஒரு பகுத்தறிவு சிந்தனையும் தேவையில்லை. கடவுளை நம்புவதற்கு தான் பகுத்தறிவு அவசியமாகிறது. எப்படி? இறைவழி நின்று அலசுகிறது இக்கட்டுரை
    
    கடவுள் தான் இவ்வுலகில் அனைத்து உயிர்களையும் படைத்ததாக கொண்டால் ஏனைய உயிர்கள் அல்லாது பிரத்தியேக குணாதிசயங்களோடு மனிதர்களை மட்டும் படைத்ததன் நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை நிறைவேற்ற கடவுள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

  என்ற கேள்விகளுக்கு தெளிவான விடை சிந்தனைக்கு உகந்த வகையில் அமைந்தால் "கடவுளை நம்புவதற்கு" எந்த வித தடையும் எவருக்கும் இல்லை. சரி.,

மனித மூலங்கள் மண்ணில் படைக்கபடுவதற்கு முழு முதற் காரணம் குறித்து குர்-ஆன் கூறும்போது,

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)   

        (ஜின்கள்- இக்கட்டுரையின் நோக்கமில்லை என்பதால் அவை குறித்த பார்வை இங்கு வேண்டாம்) ஆக மனித படைப்பின் நோக்கமே இறைவனை வணங்குவதற்காகவே எனும் போது கடவுளுக்கு வழிபாடுகள் தேவையா...? என்ற கேள்வியே அர்த்தமற்றதாகிறது.

  ஆனால் "அல்லாஹ்" எவ்வித தேவையுடையவனும் அல்ல என்பது வேறு விசயம்.அவ்வாறு வணங்குவதற்காக படைக்கப்பட்ட மனிதனுக்கு வணங்குவது உட்பட வாழ்வதற்கு தேவையான அனைத்து நடைமுறை செய்கைகளும், தெரிவுகளும் மிக தெளிவாக மற்றும் சரியாக கடவுள் புறத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

  அவ்வாறு மனித சமுக முழுமைக்கும் பின்பற்ற தகுந்த வழிகாட்டுதல்கள் இருக்கும் போது தான் மனிதர்கள் மேற்கொண்ட நன்மை தீமைக்கு தகுந்தாற்போல் அவர்களுக்கு பரிசோ,தண்டனையோ அளிப்பதென்பது நியாயமானதாகும்.

மனித குல முழுமைக்கும் நேர்வழி காட்ட கடவுளே நேரடியாக இப்புவிக்கு வர வேண்டுமா?

     மனிதர்களுக்கு வழிகாட்ட கடவுளே நேரடியாக மனித வடிவெடுத்து வருகிறார் என வைத்துக்கொள்வோம்.தாளாரமாக மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய தவிர்க்க வேண்டிய அனைத்து விசயங்களையும் தன் சொல்,செயல் மூலமாக மிக தெளிவாக எடுத்துரைக்க முடியும்.அதன் படி மக்களையும் நேரான வழியில் செலுத்த முடியும். சரி, எவ்வளவு காலத்திற்கு மனிதர்களோடு மனிதராக கடவுள் உலா வர முடியும்?

   அச்சமுகம் நல்லவனவற்றை பின்பற்றும் வரையிலா...அல்லது உலகம் அழியும் வரையிலுமா...? மேலும், கடவுள் மனிதனாக அவதரிக்கும் பொழுது மனித குணாதிசயங்களுடன் மனிதான மாற முடியும்,  அல்லது இருக்கும் காலம் வரை மனிதனாக நடிக்கவே மட்டும் தான் முடியும். உங்களைப்போன்று என்னைப்போன்று இயல்பாகவே ஆசை, துக்கம், தூக்கம், கோபம், தாபம், ஏமாற்றம், பசி போன்ற சராசரி மனித எண்ணங்களோடு நிச்சயமாக வாழ முடியாது.

    ஆக மிக நேர்த்தியான மற்றும் துல்லியமான வழிகாட்டுதல்கள் கடவுள் மனிதனாக இருந்து தந்த போதிலும்,ஒரு நிலையில் அவைகளை சரிவர நாம் பின்பற்றா நிலையில் எளிதாக நம்மால் முறையிட முடியும் ஏனெனில் நாம் மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்கிறோம்.

      ஆனால் வழிகாட்ட வந்தவரோ கடவுளாக இருந்து மனிதனாக வாழ்ந்தவர்.ஆக கடவுள் மனிதனாக அவதரித்து மனித மனங்களை சீர் செய்வதென்பது ஒரு முழுமைப்பெற்ற பணியாகாது. அப்படியெனில், எக்காலத்திற்கும் ,எந்நேரத்திலும் மனிதர்களால் குறை கூறா வண்ணம் ஒரு நிலையான வழிகாட்டியே அதுவும் பொதுவான பின்பற்றதலோடு கடவுள் என்பவர் ஏற்படுத்த வேண்டும்.அது தான் நியாயமானதும் கூட அதற்கு.,

       "மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்ந்து மனிதனாக மரிக்கும் ஒருவரை மனிதர்களுக்கு நேர்வழி காட்ட அவர்களுக்கு மத்தியில் வாழ செய்ய வேண்டும். இதை தான் "இஸ்லாம்" மிக தெளிவாக முன்மொழிகிறது.

     மனித மூலங்கள் மண்ணில் வாழ தொடங்கிய நாள் முதல் அவர்களுக்கு "ஓரிறையின் போதனைகளின்" அடிப்படையில் வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய ஏவல்கள்-விலக்கல்களை மிக தெளிவாக விளக்கி மக்களை பின்பற்ற சொன்னதோடு தாமும் பின்பற்றி வாழலானார்கள்.

  அவ்வாறு மக்களோடு மக்களாக வாழும் தருவாயில் எல்லோருக்கும் ஏற்படும் எண்ணங்களின் அடிப்படையில் தங்களின் வாழ்க்கையே அமைத்துக்கொண்டாலும் கெட்ட செயல்பாடுகள் யாவும் துறந்து நன்மையே மட்டுமே செய்து மனித புனிதர்களாக வாழ்ந்து மக்களுக்கு ஓர் நல்ல வழிகாட்டியானவர்கள் தான் இறைவன் மனிதர்களுக்கு மத்தியில் தேர்ந்தெடுத்த "இறைத்தூதர்கள்" ஆவார்கள்.

(நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே "(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்" (என்று நபியே! அவர்களிடம் கூறும்).  (21:7)
            
       ஒவ்வொரு சமுதாயமும் நேர்வழி பெற வேண்டும் என்பதற்காக உலகில் உண்டான அனைத்து சமுதாயத்தினருக்கும் "இறைத்தூதர்கள்" அனுப்பப்பட்டனர். அதுவும் அவர்கள் மொழி பேசக்கூடியவராகவே. மேலும் அம்மக்களில் ஒருவரே முன் மாதிரியாக நின்று அம்மக்களுக்கு மத்தியில் வாழ்வதால் அதை அச்சமுகம் எந்த வித பிறழ்வுமின்றி மிக எளிதாக பின்பற்ற முடியும்.

   அவ்வாறு பின்பற்ற நிலை வரும்போது கூட ஒரு தகுந்த காரணம் சொல்லமுடியாது ஏனெனில் இங்கு வழிகாட்டி நம்மைப்போல் மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்பவரே! எனவே அவரை பின்பற்றுவது எல்லா காலத்திற்கும் எல்லா நேரத்திற்கும் பொருந்தக்கூடியதே.,

 ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  (14:4)

        அவ்வாறு அவர் மரணித்த பின், வரும் காலங்களில் வழிதவறும் மக்களுக்காக வேறொரு "இறைத்தூதர்" அப்போதைய மக்கள் மத்தியில் இறைவனால் நியமிக்கப்படுவார். ஆதம் அலை தொட்டு நூஹ், மூஸா,இப்ராஹீம்,ஈஸா (அலை) தொடர்ந்து அனுப்பப்பட்டவர்கள் தான் இறைத்தூதர்கள்.அவர்களில் முஹம்மது நபியுடன் "இறைத்தூதர்" வரிசை முற்றுப்பெற்றது.

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  (33:40)

     இறைத்தூதர்கள் வரும் வழியில் அவர்களில் சிலருக்கு வேதங்களும் கொடுக்கப்பட்டன.அத்தகைய வேதங்களில் இறுதியானது தான் "குர்-ஆன்".ஆக இன்று முஹம்மது நபி அவர்கள் உயிரோடு இல்லையென்றாலும் அவர்களை பின்பற்ற தகுந்த வகையில் அவர்கள் கொணர்ந்த வேதமும் அவர்களின் வாழ்வும் நம் கண் முன் திறந்தே இருக்கிறது.

   அதை பின்பற்றுவது உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும் ஏனெனில் ஏனைய இறைத்தூதர்கள் போல் அல்லாமல் "இறுதித்தூதரும் -இறுதி வேதமும்" உலகம் முழுவதற்கும் அருட்கொடையான ஒன்று! மாறாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டும் உரித்தானதல்ல!!


   (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.  (21:107)

                                                   அல்லாஹ் மிக்க அறிந்தவன்
       

read more "இறைத்தூதர்கள் ஏன்?"

Thursday, September 09, 2010

இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து

                                              ஓரிறையின் நற்பெயரால்...
   குர்-ஆன் கூறும் ஈஸா (அலை) அவர்களும் பைபிள் முன் மொழியும் ஏசுவும் ஒன்றா...? இஸ்லாமியர் சிலர் மனதில் கூட ஊசலாடும் கேள்வி இது தான்.

  சுருக்கமாக கூறினால் "ஒன்று" என்று சொல்லலாம்.விளக்கமாக கூறினால் "இல்லை" என்று சொல்லலாம்.என்ன தெளிவான குழப்பமாக இருக்கிறதா? அதை விளக்கவே இக்கட்டுரை.



 இயேசுவை கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ உயர்த்தி வர்ணிக்கப்படும் கிறித்துவத்தில் அவரது ஏனைய அற்புத நிகழ்வுகள் குறித்து சிலாகித்து கூறப்பட்டாலும் இயேசு கிறித்துவை பற்றி பைபிள் இப்படியும் குறிப்பிடுகிறது.


 34.பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள், சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.
 35.எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.                                
                                                                                     (மத்தேயூ அதிகாரம்:10)

17.பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான்;

 18.அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே; (மாற்கு அதிகாரம்:10)

 49.பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
 50.ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.
 51.நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
 52.எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
 53.தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.   (லூக்கா அதிகாரம்:12)

34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.  (மாற்கு அதிகாரம்:15)

 19.அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
 20.அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
                                                                                        ( மத்தேயூ அதிகாரம்:8)

                 இவ்வாறு கடவுள் ஸ்தானத்திற்கு அல்லது கடவுளின் மகனாக மகிமைப்படுத்தி கூறப்படும் இயேசு கிறித்துவை பற்றிதான் மேலுள்ள வாக்கியங்களும் உள்ளன.அவ்வாறு கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ கருதப்படுபவர் குறித்து சராசரி மனித பண்புகளோடு அல்லது அதற்கு கீழாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

   இங்கு பைபிள் குறித்து நான் விமர்ச்சிக்க வரவில்லை. மாறாக கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ சித்தரிக்கப்படும் ஒருவரின் தகுதிக்கு இவ்வாசகங்கள் ஏற்புடையதா என்பதே என் கேள்வி? 
  
    ஆனால் இஸ்லாம் இயேசு கிறிஸ்து குறித்து கூறும்போது கடவுளின் மகன் இல்லையேன்று ஆணித்தரமாக கூறினாலும் இறைவனின் தூதுவர்களில் ஒருவர் என்பதை முன்மொழிந்து அவரது தூது தன்மைக்கு கலங்கமோ, தவறான கற்பிதங்களோ கொடுக்காமல் தூதரும்,தூய மனிதர் என்ற நிலைப்பாட்டிலும் இயேசுவை மிகச்சரியாக கண்ணியப்படுத்துகிறது.

    இங்கு ஒரு தெளிவு "பைபிளும், குர்-ஆனும் முன்மொழியும் அந்த இறைத்தூதரை "இயேசு கிறித்து" என்ற பெயரில் உச்சரிக்கும் பொழுது சிலுவையில் அறையப்பட்டு,கை,கால்களில் ஆணிகள் ஊடுருவப்பட்ட நிலையில், முள் கீரிடம் சுமந்தவராக, செங்குருதி வடிந்தவராக மனித கரங்களால் உருவாக்கப்பட்ட இடதுபுறம் தலைச்சாய்த்த முகம் தான் ஏனோ...ஞாபகம் வருகிறது.

   கடவுளின் மகன்(?) என கூறப்படும் அந்த தூயவருக்கு கொடுக்கும் கண்ணியமா இது? அதே நேரத்தில் திருக்குர்-ஆன் கூறும் நபி ஈஸா (அலை) அவர்கள் பெயரை உச்சரிக்கும் பொழுது எந்தவித எண்ணத்தோன்றங்களும் எழாது என்பதால் இனி அந்த தூய இறைத்தூதரை "ஈஸா (அலை) என்ற பதத்திலே இங்கு பெரும்பாலும் பயன்படுத்துகின்றேன். அல்லாஹ் அவன் திருத்தூதரை குறித்து சொல்வதை கேளுங்கள்.,

மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;.  (3:45)

     "மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்."  (3:46)


"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!  (3:55)

 அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;... (2:253 ன் சுருக்கம்


மேலும் பார்க்க நபி ஈஸா அலை குறித்து :    (2-87, 3-45>59, 4-157,171, 
5-17,72,75,78,110>120, 9-30, 19-16>34, 23-50, 42-13, 43-57,61,63, 61-6, 3-52, 57-27, 61-14)  

    மேற்குறிப்பிடப்பட்ட அல்லது குர்-ஆன் முழுவதும் நபி ஈஸா அலை அவர்களை பற்றி குறிப்பிடும் எந்த ஒரு வசனமும் அவர்களின் தூதுத்துவ தன்மைக்கு இழிவாகவோ தனி மனித கண்ணியத்திற்கு குறைவான நிலையிலோ குறிப்பிடுவதாக இல்லவே இல்லை.

  நான் மர்யமின் மைந்தருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆவேன் - இறைத் தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர் - எனக்கும் அவருக்கும் இடையே இறைத்தூதர் எவருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(புஹாரி : 3442 அபூஹுரைரா (ரலி))


 'ஆதமின் மக்களில் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவரின் மகனையும் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பிறகு, 'நான் இக்குழந்தைக்காகவும் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்னும் (மர்யமுடைய தாய் செய்த பிரார்த்தனையை கூறும் - என்ற 3:36-வது) இறைவசனத்தை ஓதுவார்கள். 


(புஹாரி : 3431 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி)

.
  இவ்வாறு இறைவனும் அவனது இறுதித்தூதரும் நபி ஈஸா (அலை) அவர்ககளை கண்ணியப்படுத்தி கூற என்ன காரணம்? ஆக, கிறித்துவம் கூறும் இறைமகன் பண்புகள் ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்தி வருகின்றதா? இஸ்லாம் கூறும் இறைத்தூதர் என்ற நிலை ஈஸா (அலை) அவர்களுக்கு பொருந்துன்றதா?

    நன்றாக சிந்தியுங்கள் கிறித்துவ சகோதரங்களே., இஸ்லாமியர்கள் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் புனித வேதமாக வர்ணிக்கப்படும் பைபிள் குறித்தும் அது கடவுளின் மகனாக உருவப்படுத்தும் இயேசு குறித்தும் தான்.மாறாக கிறித்துவ சமுகத்திற்கு உண்மையாக அனுப்பப்பட்ட இஞ்ஜில் வேதங்குறித்தோ அல்லது உண்மைத்தூதர் ஈஸா(அலை) அவர்கள் குறித்தோ அல்ல.,

   ஏனெனில் உண்மையான இயேசுவை விமர்சிப்பவன் தூய முஸ்லிமாக இருக்க முடியாது., தூய இயேசுவை பின்பற்றாதவன் உண்மை கிறித்துவனாக இருக்க முடியாது.ஆக அந்த தூய இறைத்தூதர் ஈஸா(அலை)அவர்கள் சொன்னது என்ன? செய்ய சொன்னது என்ன ? என்பதை அறிய முற்படுங்கள்.,

      நீங்கள் உண்மை தேடுதலில் விருப்பம் உடையவராக இருந்தால் இரண்டில் ஒன்றுதான் கலங்கப்படுத்தப்படாத உண்மையாகவே இறைவனின் வார்த்தைகளாக இருக்க முடியும் என்ற நடு நிலை எண்ணத்தோடு பைபிளையும் குர்-ஆனையும் ஆராயுங்கள். சர்வ வல்லமை படைத்த இறைவன் உங்களுக்கும் எனக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

    பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.  (திருக்குர்-ஆன் 57:27)

                                                      அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "இஸ்லாம் பார்வையில் இயேசு கிறிஸ்து"

Sunday, September 05, 2010

மனிதம் மறைத்த மரணங்கள்....













குருதியின் நிறம் கூட அறியாதவர்களின் 
சடலங்கள் குவியலாய்., 
காஃபா-  புண்ணிய பூமி.., வல்லோன் சொன்னது
காஸா - புண்படுத்தப்பட்ட பூமியோ.. யார் செல்வது?

அந்த சகோரங்களுக்கும் சேர்த்தே நமது "துஆ" இருக்கட்டும்
ஓடித்திரிந்த சாலைகள் 
உறவுகளுடன் கூடி மகிழ்ந்த இல்லங்கள் 
தொழுது தியானித்த மசூதிகள் 
இவை மட்டுமா ?

இன்னோரன்ன எத்தனையோ...
இழந்து நிற்கின்றோம் பேதைகளாக 
உடமைகளை மட்டும் அல்ல
உரிமைகளையும் தான்!

உயிரின் பெறுமதி உணரப்பட வில்லை 
அது காரணமே இன்றி பறிக்கபடுகிறது 
யூதனின் துப்பாக்கி முனையாலே ...
எம்மவரின் குருதியில் மட்டும் ஏனோ 
இனம் தேடபடுகிறது 

நிரை நிரையாக பேரீச்சை மரங்கள் ,
மனதை கவரும் பூஞ்சோலைகள் 
ஆயினும் அம்மலர்கள் கூட 
மணம் வீச மறுக்கின்றன 
பலஸ்தீனியன் புதையுண்ட மண்ணில் 
அது முளை கொண்டமயலோ ?

இது நாம் சுரண்டிய பூமி அல்ல 
எமக்கே உரித்தான பூமி 
எமது புனித பூமி 
விடியலுக்காக காத்திருக்கின்றோம் 
எம் இறைவனிடம் கை ஏந்தி !!!


என்னோடு சேர்ந்து நீங்களும்...

                                                                                                                           - ருக்கையா அப்துல்லாஹ்
                                                                                                                               S R I   L A N G A
read more "மனிதம் மறைத்த மரணங்கள்...."

Wednesday, September 01, 2010

ஏன் இஸ்லாம்...?

                                                 ஓரிறையின் நற்பெயரால்


"இஸ்லாம் " என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில் தெரிந்தோ தெரியாமலோ மதம் சார்ந்த/ சாரா கொள்கையுடையவர்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. ஏன் ?

 இஸ்லாம் இந்த மனித சமுகத்திற்கு அளித்தது என்ன? மனித சமுகத்திலிருந்து அழித்தது என்ன? என்று அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 முதலில் யாவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்., இஸ்லாம் சுமார் 1400 வருடங்களுக்கு முன்பாக அரேபிய பாலையில் முஹம்மது நபியால் தொடங்கப்பட்ட மதமல்ல.,

    மாறாக முஹம்மது நபி அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமே இஸ்லாம்.ஏனெனில் மனித மூலத்தின் ஆதி பிதா மண்ணில் படைக்கப்பட்டதிலிருந்தே இஸ்லாம் மனித மனங்களில் உலாவர துவங்கிய மார்க்கம்.
 
 இத்தெரிவை ஆயிரம் முறை உலகுக்கு அறிவுறுத்தியும் ஆயிரத்தொருமுறை இவ்வுலகு அதனை தவறாக புரிந்துக்கொண்டது அல்லது இவ்வுலகிற்கு தவறாக புரிய வைக்கப்பட்டது., எனவே தான் இஸ்லாம் குறித்து "மிக மிக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட அழகான மார்க்கம்" என பெர்னார்ட் ஷா கூறினார்.

     ஏனைய மதங்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை ஒரு வரையறுத்தலின்றியே வைத்திருக்கும் இக்காலக்கட்டத்தில் இஸ்லாம் மட்டுமே மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்னமே அதன் கொள்கை கோட்பாடுகளை முன்மொழிந்து அது எக்காலத்திற்கும் எதற்காகவும் யாருக்காகவும் நெகிழ்வடையாது என உரக்கக்கூறிய மார்க்கம்.

    ஆனால் இன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ இஸ்லாத்திற்கு எதிராக நடுநிலை சிந்தனை தவிர்த்த ஏனையோரால் அநாகரிகத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி விமர்சனம் என்ற பெயரில் தன்னின் மட்டரக எண்ணங்களுக்கு நாகரிக ஆடை கட்டி நாடெங்கிலும் நடமாட விட்டு மகிழ்கின்றனர்.அதிலும் இணையத்தில் விமர்சிப்போர்  தங்கள் வார்த்தை வாகனத்தில் வன்முறை எழுத்துக்களையே வறுத்தமின்றி சுமந்து வருகின்றனர்.

    இஸ்லாமிய (?) பயங்கரவாதத்தை வேரறுக்கிறோம் என கூறி எழுத்து பயங்கரவாதத்தை அமோகமாக இணையத்தில் அறுவடை செய்கிறார்கள்.அவர்களிடம் நாம் கேட்டு கொள்வது எல்லாம் ஒன்று தான் "இஸ்லாம் முன் மொழியும் எந்த ஒரு நடைமுறை சட்டம் இன்று மனித சமுகத்திற்கு பொருந்தாது? என்பதை குறித்து விமர்சனம் செய்யுங்கள்
  
    இவ்வாறு கேட்ட மாத்திரத்தில் "உலகமெங்கிலும் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம்..? என்பதே ஏனையோரின் எதிர்கேள்வியாக இருக்கும். உங்களோடு சேர்ந்து நாங்களும் கேட்கிறோம்...உலகமெங்கிலும் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம்..? இஸ்லாமும் அது கூறும் வழி முறைகளுமா...? அல்லது இஸ்லாமிய பெயரில் அறியாமையால் செய்யும் தனிமனித அல்லது சுயநலம் விரும்பும் சமுக குழுக்களா...?

    எங்கோ உயிர்க்கொலைகள் -முகவரியில்லா முஸ்லிம் முகங்கள் செய்வதாக கூறப்படுபவை உண்மையல்ல.அஃது அது உண்மையென்றால் அவன் உண்மை முஸ்லிம் அல்ல! ஏனெனில் எந்த காரணமுமின்றி ஒருவனை கொலை செய்தவன் சமுகம் முழுவதையும் கொலை செய்தவன் போலாவான் என்ற நபிவழியில் வார்ர்த்தெடுக்கப்பட்டவர்கள் தான் உண்மை முஸ்லிம்கள்.

       ஆப்கானிய தாலிபான்களையும், எங்கோ இருக்கும் அல் கொய்தாவையும் விடுங்கள் (அவர்கள் செய்வதை நானறியேன்)  உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் முஸ்லிம்கள் எத்தனை முறை உங்களை வாளெடுத்து வெட்ட வந்திருக்கிறார்கள்? தாங்கள் இல்லாத பொழுது எத்தனை முறை உங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்க முற்பட்டிருக்கிறார்கள்...?
 
     அல்லது யாரும் இல்லாதபோது உங்கள் வீடுகள் குண்டு வைத்து எத்தனை முறை தகர்க்க பட இருந்தது...? சற்று நடு நிலையோடு சிந்தித்து சொல்லுங்கள்    இஸ்லாமல்லாத இணைய சகோதர்களே மேற்கத்திய ஊடகங்களின் பயங்கரவாத சாட்சியாக சித்தரிக்கபடும் முஸ்லிம்கள் ஆளுயர ஆடையும், அதைவிட பெரிதாக ஆயுதமும் கொண்டு காட்சியளிக்கும் நிலை மாற்றி.,

    உங்கள் தெரு கோடியில் டீ கடை வைத்திருக்கும் அப்துல் ரஹ்மானும்,உங்கள் கண்ணெதிரே ஐஸ்கிரிம் வண்டி தள்ளும் அப்துல்லாஹ்வும் முஸ்லிம்கள் தான் என்பதை உணருங்கள்.

   இஸ்லாமின் ஏனைய ஆக்கங்கள் குறித்து விமர்சனம் எழுதுவதை விட பர்தா குறித்து எழுவதே அதிகம்,அனைத்திற்கும் பதில் அளித்தாலும் மீண்டு(ம்) அவர்களிடம் முளைக்கும் கேள்வி ஏன் கட்டாய படுத்துகிறீர்கள்? இக்கேள்விக்கு முன் இம்மார்க்கத்தில் எந்த வித நிர்பந்தமும் இல்லை என்பதன் அர்த்தம் அறிவார்களா குர்-ஆனை கரைத்து குடித்த இந்த அரைகுறை அறிவு ஜீவிகள்,.

   இஸ்லாம் முன் மொழியும் பர்தா (அது பெண்களுக்கு மட்டுமானது அல்ல பார்க்க :அல்குர்ஆன்-24:30)  இந்த சமுக பெண்களுக்கு எத்தகைய கேடுகளை விளைவித்தது? பர்தா அணிந்த பெண்களை நெருப்பில் விழுந்த விட்டில்களாக வர்ணிக்க முற்படுவோர் இஸ்லாம் ஏன் பெண்களுக்கு அவ்வாறு கூறுகிறது என்ற உண்மையே அறிந்துக்கொண்டே மறுக்காதீர்கள்.(பர்தா குறித்து மேலும் அறிய)

    அதுப்போலவே பலதார மணமும்.,
   பலதார மணத்தை எதிர்ப்போர் வாழும் நாட்டில் தான் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுறை அணியுங்கள் என விபச்சாரத்தின் வாசலுக்கு  விளம்பர விலாசம் தரப்படுகிறது.

   மேலும் சீன்ன வீடு என்றும் வைப்பாட்டிகள் என்றும் பெண்களுக்கு உயர் அந்தஸ்து(?) வழங்கவதை பலதார மணம் முற்றாக தவிர்க்கிறதே அதற்காகவா இஸ்லாத்தின் மீது கோபம்? இதை எதிர்ப்போர் முதலில் "இன்று உலகில் நடைபெறும் விபச்சாரம் முழுவதையும் சின்ன வீட்டு பிரச்சனைகளையும் முற்றாக ஒழியுங்கள்

  பின்பு நாமும் ஒத்துக்கொள்கிறோம் பலதார மணம் வேண்டாம் என்று. இங்கு தடுப்பது ஒரு விசயமல்ல ஒழிப்பது தான் முக்கியம்.அதை தான் இஸ்லாம் சொன்னது, செய்யவும் சொன்னது. இஸ்லாமியனாக பிறக்கும் எல்லா முஸ்லிம்களும் நான்கு மனைவிகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்பது மார்க்கம் வலியுறுத்தும் கட்டாய கடமையல்ல...அது ஒரு சலுகை மட்டுமே...அதற்கு உங்கள் வீடுகளுக்கு அருகாமையில் வாழும் முஸ்லிம்களே சாட்சி!

   இணைய சகோதரர்களே தாங்கள் தாராளமாக இஸ்லாத்தின் மீது ஆதாரத்தோடு குற்றச்சாட்டை முன் வையுங்கள்.உங்களுக்காக பதில் தர இஸ்லாம் காத்திருக்கிறது உங்களது எண்ணங்களை சந்தேகமாக வையுங்கள் ஆனால் காழ்ப்புணர்ச்சியில் மட்டும் வேண்டாம். இன்று இஸ்லாமியர்களை விட அஃதில்லாதோர் தான் இஸ்லாத்தில் குறை கண்டுபிடிக்கும் நோக்கில் இஸ்லாமிய நூல்களை அதிகமாக பார்வையிடுகிறார்கள்

   அல்ஹம்துலில்லாஹ்! தனக்கு அறவே பிடிக்காது என்று சொல்வனவற்றோடு தான் தங்கள் அன்றாட வாழ்வை கழிக்கிறார்கள்.இது தான் இஸ்லாம் மனித மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம்.நீங்கள் இஸ்லாத்தை நேசிக்க வேண்டாம் உங்கள் எண்ணங்கள் உண்மையே சுவாசிக்கட்டும் ஏனெனில் இஸ்லாம் பற்றி அறிய அதுவே முதற்படி

 ஏன் இஸ்லாம் என இஸ்லாத்தில் குறை காண புறப்பட்டவர்களின் தேடுதல் நடுநிலையோடு இருந்ததனால் தான் மால்கம்X ,பிலால் பிலிப்ஸ் போன்றோர்கள் முதல் இன்று பெரியார்தாசன் வரை சொல்லிக்கொள்கிறார்கள் "என் இஸ்லாம்"

குறிப்பு:இன்று நீங்களோ, நானோ இஸ்லாத்திற்கு வருவதாலோ, வெளியேருவதாலோ இஸ்லாத்திற்கு எந்த உயர்வும், தாழ்வும் இல்லை மாறாக நன்மையும் தீமையும் நமக்கே!   
    
   எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (இறுதி வேதம் 2:146)

                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "ஏன் இஸ்லாம்...?"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்