"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, December 27, 2011

கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?


                                                        ஓரிறையின் நற்பெயரால்

கடவுள்!
மனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை. இருத்தன்மைகளில் கடவுளை மையப்படுத்தியே மனித வாழ்வு இருக்கிறது.
ஒன்று கடவுளை ஏற்று மற்றொன்று கடவுளை மறுத்து.

 கடவுளை ஏற்பதென்பது அவர்கள் சார்ந்த மத/ மார்க்கத்தின் ஊடாக பிறப்பின் அடிப்படையில் இயல்பாக உருவாகும் நம்பிக்கை சார்ந்த விசயமாக தொடங்கி, பிறந்த இடம், வளர்ந்த சூழல், மற்றும் ஆய்தறிவும் எண்ணங்கள் போன்றவற்றின் தாக்கத்தால் கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகரித்து வாழும் மக்கள்.

அதைப்போல சுற்றுசூழல், வர்த்தரீதியான சமூகப்பின்னணியில் தம் வாழ்வை தொடர்ந்து பிரிவினைவாதம், அறிவுக்கு பொருந்தாத மூட நம்பிக்கைகள், மதத்தின் பெயரால் அனாச்சாரியங்கள், கடவுளுக்கே பூஜை புனஷ்காரங்கள் போன்றவற்றை பார்த்து சிந்தனை வயப்பட்டு தம்மை "நாத்திகவாதியாக" அடையாளப்படுத்திக்கொண்டு இச்சமூகத்தில் கடவுளை எதிர்த்து அல்லது மறுத்து உலாவரும் மக்களில் ஒரு பிரிவினர்.

ஆக இருபாலருக்கும் தங்களுக்கு எது உணர்த்தப்படுகிறதோ, தங்களின் சிந்தனையில் எது உதிக்கிறதோ அதுவே அவர்கள் சார்ந்து செயல்படுவதற்கு பிரதான காரணமாகிறது.

ஆத்திகர்கள், கடவுளின் பெயரால் தமக்கு போதிக்கப்படுபவற்றை மையமாக வைத்தே கடவுளை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தாங்களோ ஆய்வு ரீதியாக சிந்தித்து அதில் காணக்கிடைப்பதை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக  சொல்கின்றனர் நாத்திகர்கள்.

உண்மைதான். ஆய்ந்தறியாத எந்த செயலின் உண்மை நிலையும் முழுவதும் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்பது ஏற்புடையது தான். ஆனால், அறிவியலால் எல்லா செயல்களையும் முழுவதும் ஆய்தறிந்து உண்மையான தகவல்களை தர முடியாது. தரும் வரையில் பொறுத்திருந்தால் நம்மால் எந்த செயலையும் முழுமையாக செயல்படுத்த முடியாது.

அதுவரை பொய்பிக்காத நிகழ்வை மட்டுமே உண்மையெனும், அதையே நாம் ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் அறிவியல் மெய்படுத்தாத விசயங்களும் உலகில் உள்ளன. அதையும் நாம் ஏற்றுதான் கொள்கிறோம். அதனால் தான் கெடு தேதிக்கு முன்னமே கெட்டுப்போகும் உணவுப்பொருட்களுக்கும், காலாவதியாகும் தேதி முடிந்தும் இயங்கும் பேட்டரி போன்ற பொருட்களுக்கும் நாம் அறிவியல் முரண்பாட்டை அங்கு கற்பிப்பதில்லை.

அறிவியலால் நிருபிக்கப்படாமலும் ஒன்றை நாம் உண்மைப்படுத்தலாம்.  ஆம்!  ஒருபுறம் தலை, மறுபுறம் பூ என இரு பக்கங்களைக்கொண்ட நாணயம் சுண்டிவிடப்படும் போது தலை அல்லது பூ என நம்மால் நூறு சதவீகிதம் சரியான பதிலை சொல்ல முடியும். அதுவும் ஒரு முறையல்ல... ஆயிரம் முறைக்கூட நம்மால் சொல்ல முடியும். ஆனால் அவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நமக்கு கிடைத்த முடிவுகளை வைத்தோ அல்லது நமது சிந்தனைரீதியான அறிவை வைத்தோ அல்ல.. வெற்று ஊகங்களை வைத்து மட்டுமே அவற்றை உண்மைப்படுத்துகிறோம்.

இப்படியான கடவுள் குறித்த அனுமானங்கள் - எண்ணங்களை தான் அறிவியலா(க்)க பெரும்பாலான நாத்திகர்கள் நினைக்கிறார்கள் 

சரி, சிந்தனைரீதியாக எடுக்கும் முடிவுகளும் முழுவதும் சரியாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நமது சிந்திக்கும் திறன் நாம் பெற்ற அறிவின் அளவிற்கு மட்டுமே செயல்பட முடியும். ஆகவே தான் சில நேரங்களில் மற்றவர்களின் பார்வையில் சரியாக தெரிகின்ற ஒரு செயல் நமது சிந்தனைக்கு தவறாக தெரிந்தும், நிதர்சனமாக பின்னாளில் உணரும் போது பிறரின் நிலைப்பாடே சரியானதாக நமக்கு படுகிறது. இதை நம் வாழ்நாளில் பலமுறை உணர்ந்தும் இருப்போம்,

காரணம், நமது சிந்தனைக்கு உட்பட்டே எல்லா முடிவுகளையும் நாம் எடுக்கிறோம். நமது சிந்தனையின் திறம் தாண்டி செயல்படும் பிறரால் அச்செயலின் தன்மை ஆராயப்படும் போது நமது தவறு தெளிவாய் விளங்கும். இப்படி மனிதர்களுக்கு மனிதர் சிந்தனை மாறுபடுவதால் ஒரு செயலில் உண்மையான விளைவு நாம் எடுக்கும் முடிவுக்கு நேர்மாறாக இருக்கவும் வாய்ப்ப்பிருக்கிறது. 


ஒன்றை குற்றப்படுத்தவோ விமர்சிப்பதாகவோ இருந்தால் விமர்சனத்திற்கு உள்ளாகும் அந்த நிலைகளை விட விமர்சிக்கும் நிலை மேலான தன்மைகளை கொண்டிருக்க வேண்டும்.

அதாவது, கடவுளை மனிதன் விமர்சிப்பதாக இருந்தால் கடவுளின் விளக்கப்பட்ட எல்லா தன்மைகளையும் விட விமர்சிக்கும் மனித அறிவு ஒரு படி மேல் இருக்கவேண்டும். குறைந்த பட்சம் கடவுளின் தன்மைகளோடு சமமான அறிவையாவது மனிதன் பெற்றிருக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் முதல் முதல் ஆகாய விமானம் வரை எந்த ஒன்றின் தன்மையும் விமர்சிக்க அல்லது குற்றப்படுத்த ஒரு துணை சாதனத்தின் உதவிக்கொண்டு ஆராயும் நாம்...கடவுள் என்ற நிலையை மட்டும் புறக்கண்ணில் தெரியும் காட்சிகளையும் நமக்கு மட்டுமே திருப்தியை ஏற்படுத்தும் நமது பகுத்தறிவின் வெளிப்பாட்டையும் வைத்து விமர்சிப்பது எப்படி பொருத்தமான செயலாக இருக்கும்?

பேரண்ட படைப்பாளனான கடவுளை அதுவும் அவன் சார்ந்த இனத்தில் அவன் ஒருவன் மட்டுமே இருக்கும் போது அவன் செயலை / தன்மைகளை விமர்சிக்க நமதறிவை அளவுகோலாக வைப்பது எப்படி சாத்தியமாகும்? ஏனெனில் கடவுள் சார்ந்த இனம் என்னவென்றே அறியாதபோது நாம் பெற்ற அறிவை உலகின் உச்சமாக வைத்து கடவுளை குறைப்படுத்தி விமர்சிப்பதென்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

ஆனால் மனித அறிவு மற்றோருவருடன் ஒப்பிடாதவரை மட்டுமே நிறைவானதாக நம்ப முடியும். அவனைக்காட்டிலும் அறிவார்ந்தவருடன் ஒப்பிடும் போது குறைப்படுத்தபடுகிறது.

இலட்சகணக்கான யுகங்களாக பயணிக்கும் இவ்வுலகத்தில் முடிவுற்ற பெரும்பாலான நிகழ்வுகளுக்கே காரணம் கண்டறியப்படா நிலையில் சிறுப்புள்ளியாய் தோன்றி மறையும் மனிதன் பேரண்ட விதிகளை தாண்டி செயல்படும் முடிவுறா நிலையில் இயங்கும் ஒன்றை விமர்சிக்கும் அறிவாளியாக தன்னை சொல்லிக்கொள்வது தான் ஆச்சரியமான அறியாமை!

                                                    அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more "கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?"

Tuesday, December 13, 2011

நீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..?

                                                              ஓரிறையின் நற்பெயரால்

தவ்ஹீது (ஏகத்துவம்)
தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.

அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்
  'அஹ்லுஸ் ஸூன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் ஆவர்

இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!

இஸ்லாத்தை பொறுத்தவரை அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் ஒன்றை ஏவினால் அதை ஏற்று நடப்பதே ஒருவர் முஸ்லிம் என்பதற்கு சான்று. மாறாக அவற்றில் மாற்றம் கொள்வதற்கோ - திருத்தம் செய்வதற்கோ அதிகாரம் இல்லை. இதை அல்லாஹ் தன் வான் மறையில்

 அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((33:36))

 திருக்குர்-ஆன் மிக தெளிவாக எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் விலக்குவதற்கும் அளவுக்கோலை ஏற்படுத்தி இருக்க எந்த ஒரு காரியமெனிலும் அது அல்லாஹ்வுடைய அங்கீகரிப்பும், அவனுடைய தூதரின் வழிக்காட்டுதலும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதிலும், குறிப்பாய் மார்க்க விசயங்களில் இவை இன்னும் அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.

இறைவனை மையப்படுத்தும் விசயங்களிலெல்லாம் இறை நேசர்களை  முன்னிலைப்படுத்தும் நபர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்றும் அவற்றை களைவதற்காக குழுமியிருக்கும் நபர்கள் தவ்ஹீதுவாதிகள் என்ற பெயரிலும் சமூக பார்வையில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

சுன்னத் ஜமாஅத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்வோர்களிடம் நாம் வினவினால் அவர்கள் கூறும் பதில் இது தான்
அல்லாஹ்விற்கு யாரையும் நாங்க இணைவைப்பதில்லை. மாறாக இறைவனிடத்தில் எங்களின் துஆ விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட இறை நேசர்களை முன்னிலைப்படுத்துகிறோம் என்பதே...

 கப்ரு ஜியாரத்திற்கு இது தாம் மையக்காரணமாக கொண்டால் இச்செய்கை அவர்களின் அறியாமையென்று தெளிவாய் நிரூபிக்கலாம்.
பிடரியின் நரம்பை விட அருகாமையில் இருப்பதாக சொல்லும் போது இறைவனிடம் நம் துஆக்களை சொல்ல இரண்டாம் நபரின் குறுக்கீடு அங்கு அவசியமானதன்று. அதுவும் எந்த ஒரு நபருக்கும் மற்றவரின் பரிந்துரையும் ஏற்க்கபட மாட்டாது என தெளிவாய் சொல்லப்பட்டிருக்கும் போது மேற்கண்ட காரணம் அறியாமையின் விளைவே!

அதுமட்டுமில்லாமல் இறை நேசர்களின் வருகையின் நோக்கம்
அல்லாஹ் மட்டுமே வணத்திற்குரியவனாக ஏற்க வேண்டும் -அவனுக்கு இணை துணை கற்பிக்க கூடாதென்றும்
நபிகள் (ஸல்) அவர்களின் போதனைப்படி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். புதிதாய் மார்க்கத்தில் எதையும் ஏற்படுத்தக்கூடாது -என்பதை தெளிவாய் வலியுறுத்துவதற்கே என்பதாய் இருக்கும்.

மேற்கண்ட நோக்கத்திற்காக ஒருவரது வருகையும் வாழ்வும் இருப்பது உண்மையானால்
  • எந்த தேவைக்கும் என்னை முன்வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்றோ
  • எனது மரணத்திற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை கப்ருரில் சந்தனம் பூசி கந்தூரி விழா நடத்துங்கள் என்றோ எப்படி சொல்வார்? 

    ஒருவரை நாம் மதிப்பது உண்மையென்றால் அவரது வழிமுறைகளை பேணுவது அவசியமான ஒன்று. இன்று இறை நேசர்களுக்கு கண்ணியம் செய்கிறோம் என்ற பெயரால் அவர்கள் மீதான புகழ்ப்பாக்களாக மௌலிதுகளை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

    அவர்களின் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் நபிகள் மீது மௌலிதுகளை ஓதியதாக எந்த வித ஆதாரப்பூர்வ வரலாற்று சான்றுகளும் இல்லை, ஏனெனில் மார்க்கம் அங்கீகரித்திராத செயல் என்பதை அவர்களே அறிந்திருந்தனர். ஆக அவர்களே செய்யாத, முன்மொழியாத ஒன்றை அவர்களின் பெயரில்
செய்வதற்கு மார்க்க ரீதியில் ஆதார தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள்..?

இவைதான் 
இப்படித்தான்
தர்ஹா -கந்தூரி- தகடு தாயத்துக்களை ஆதாரிப்போர் மத்தியில் எழுப்ப வேண்டிய கேள்விகள்... 

ஆனால்,


" தர்காவுக்கு போறியா அப்ப நீ நரகத்திற்கு தான் போவே...! "

    ஏற்படும் தீமையின் விளைவை மென்மையின்றி எடுத்துரைப்பதால் அவர்களின் செவிப்பறையில் செருக்குடன் அமர்ந்திருக்கும் சைத்தான் செயலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறான். ஏற்க மறுப்பதோடு எதிர் வினையும் ஆற்றுகிறான். செவி மூடும் சைத்தான் பிரச்சனைக்கான வழி திறக்கிறான்
அவர்களுக்கிடையில் ஏற்படும் விவாதம் ஒரு கட்டத்தில் இறை நேசர்களின் வாழ்வை விமர்சிக்கும் நிலைக்கு செல்கிறது.

ஒருவரை விமர்சிப்பதற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் இருக்கவேண்டும்.


1. அவரது சொல், செயல் மற்றும் வாழ்வியல் கூறுகளை நாம் நேரடியாக அறிந்திருக்க வேண்டும். அதற்கு அவரது சமகாலத்தில் வாழ்ந்தால் மட்டுமே நமக்கு சாத்தியம்.


2. அவரது வாழ்வை விளக்கும் நம்பத்தகுந்த ஆவண சான்றுகளில் அவர் குறித்த விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

இன்று இறைநேசர்களின் வரலாறுகள் என்று நமக்கு கிடைக்கபெற்றிருப்பதெல்லாம் அவர்களின் மறைவுக்கு பின்னரே அதுவும் நம்பகதன்மை குறைபாடுடன் எழுதப்பட்ட வரலாறுகளே. அதிலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் ஏதுமின்றி கறாமத்துகள் எனும் பெயரில் அற்புதங்களாக அவர்களின் வாழ்வில் சில செயல்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

    நம்பக தன்மையில்  குறைப்பாடுடைய இத்தகைய வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ஒருவரை உண்மையாக விமர்சிக்க முடியாது. ஆக அவர்களின் வாழ்வை குற்றப்படுத்தி விமர்சித்தல் என்பது பொருளற்றதாக தான் இருக்கும். ஒருவர் மரணித்தவுடன் அவரது செயல்களுக்கான பிரதிபலனை இறைவனிடத்தில் அடைந்துக்கொள்வார் எனும் போது அவர்களை விமர்சிப்பதும் தேவையில்லாத ஒன்றே!


   

       மேலும் அப்படி விமர்சிப்பதிலும் எதிர்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தான் மதிக்கும் / நம்பும் ஒன்றை விமர்சிக்கும் போது அதன் தாக்கம் கோபமாக மாறி சொல்வோர் மீது வெறுப்பாய் திரும்புகிறது. சொல்லுவது உண்மையாக இருப்பீன் கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பின் கூறும் இறைமறை வழி விளக்கமும், நபிமொழி போதனையும் பயனற்று தான் போய்க்கொண்டிருக்கின்றது.  இதன் விளைவாய் தனிமனித சாடல்களும் -இயக்க மோதல்களும் அரங்கேறுகின்றன.


மேலும் இயக்கம் சார்ந்து இஸ்லாமிய குறியீடுகள் முன்னிருத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா? 

     இவ்வுலகின் உயர்ந்த ஒற்றை சொல்லான தவ்ஹீது என்ற பதம் இயக்கரீதியில் முன்னிருத்தப்படுவதாக எண்ணி எத்தனையோ பேர் நான் தவ்ஹீதல்ல..! என்றும் தர்காவை மையப்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் என்ற வார்த்தை ஆனாச்சாரங்களின் ஆணிவேராய் நிறுவப்படுவதால் அதை தவிர்ப்பதாக எண்ணி நான் சுன்னத் ஜமாஅத் காரனல்ல..! என்று பலர் இன்றும் சொல்ல காண்கிறோம்.

உங்களில் சில பேருக்குக்கூட இவ்வாக்கத்தின் தலைப்பு ஒருவித சலனங்களை மனதில் ஏற்படுத்தி இருக்கலாம்... சிந்திக்கவேண்டும் சகோ! இவ்விரு வார்த்தைகளின் செயல்முறை வடிவம் ஒருசேர நம்மிடையே அமையா விட்டால் நமக்கு பெயரே வேறு! 

  அறியாமை களையப்படவேண்டியது என்பது சந்தேகமில்லை ஆனால் அவற்றை விளக்கும் முறை அழகிய வழியில் வெளிப்பட வேண்டும் என்பது அவசியமென்பதை விட மார்க்க கடமையும் கூட!. மாறாக முன்முடிவுகள் -பிடிவாதத்தோடு செயல்படுவோரை என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்???

   நபி வழியில் தான் தமது வாழ்வை அமைத்துக்கொள்வதாக கூறுவோர் மேற்கண்ட நிலைகளை சற்று ஆராய வேண்டும். ஏனெனில் நமது வாழ்வியல் முறைக்கு அல்லாஹ்வின் தூதர் அனைத்திலும் முன்மாதிரியாய் செயல்பட்டிருக்க அடுத்தவர்களின் வழிக்காட்டுதல் அவசியமில்லாத ஒன்று.

இறைநேசர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால். அவர்கள் வணங்கப்படுபவர்களாக யாரும் பொருள் கொள்ள வழி செய்து விடாதீர்கள்!
நாம் மட்டுமல்ல நாளை அவர்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்!

                                                 அல்லாஹ் நன்கு அறிந்தவன்


read more "நீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..?"

Thursday, December 08, 2011

கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?


                                   ஓரிறையின் நற்பெயரால்

     ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்வதே இவ்வுலக வாழ்வின் பொதுவான நியதி! கடவுளை ஏற்றாலும்- மறுத்தாலும் நன்மையை செய்து தீமையை விலக்கி வாழ்வதே பெரும்பாலான மக்களின் செயலாக இருக்கிறது.

   கடவுளின் பெயர் முன்னிருத்தப்படாமலும் மக்களால் நன்மை- தீமை என்ற இரு பண்புகளையும் பிரித்தறிந்து பேண முடியும் என்றாலும் அது எல்லா சூழ்நிலைகளிலும் முடியுமா ? என்பதே இவ்வாக்கம் முன்னிருத்தும் கேள்விகள்

முதலில் நன்மையை எடுத்துக்கொள்வோம். 

   எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி சொல், செயல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒருவருக்கு நம்மால் பயன்பாடு ஏற்படுத்துவதே நன்மை என்பதன் பொருள்!

  ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன் கிட்டினால் மட்டுமே அதற்கான செய்கைகளை நம்மால் இயல்பாகவே தொடர்ந்து செய்ய முடியும். ஆனால் பிரதிபலனற்ற ஒரு செயலை நாம் மேற்கொள்வதால் எந்த நன்மையும் நமக்கு ஏற்பட போவதில்லை. அப்படியிருக்கும் போது தர்க்கரீதியாக யோசித்தால் அச்செயலை செய்யவேண்டும் என்ற அவசியமே இல்லை..
அப்புறம் ஏங்க நன்மை செய்து வாழ வேண்டும்?
 இருங்க., இன்னும் டீப்பாக போகலாம்

  நமது குடும்பத்திலுள்ளவர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு நன்மை செய்வதால் அவர்கள் மத்தியில் நமக்கான அந்தஸ்து உயர வாய்ப்பிருக்கிறது. அத்தோடு அவர்மேல் கொண்ட அன்பால் மன திருப்தியும் கிடைக்கிறது.

    அதைப்போல் நம் பழக்க சூழலில் அறியப்பட்டவராக இருப்பவருக்கு நன்மை செய்வதால் அவர் நம் கொடை தன்மையின் புகழை பிறர் மத்தியில் பரவ செய்யலாம் - இப்படி இரு வழிகளில் உண்டாகும் நன்மையின் விளைவு நமக்கு மன திருப்தியையும் - சமூக அந்தஸ்தையும் ஏற்படுத்தும். அதன் ஊடாக பொதுப்படையாக மற்றும், உளவியல் பயன்பாடு ஏற்படுகிறது.

     ஆனால் நம்மை யாரென்ற அறியாத பிறருக்கு அல்லது யாருக்கும் தெரியாத வகையில் அல்லது நேரடி தொடர்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் நன்மைகளால் சமூக ரீதியான எந்த ஒரு பயனும் நமக்கு ஏற்படாது. சரி மன திருப்தியாவது கிடைக்குமா என்றாலும் அதுக்கும் சான்ஸ் இல்லை..

 ஏன்னா நமது செயலுக்கு பிறரால் அங்கீகாரம் அளிக்கப்படும் நிலையில் மட்டுமே மன திருப்தியை முழுவதும் நாம் அடைந்துக்கொள்ள முடியும். ஆனால் மேற்கண்ட நிலையில் அதற்கான தன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

 சிரமப்பட்டு ,உண்மையாக சம்பாதித்த பொருளாதாரத்தை பிறருக்கு எந்த வித பிரதிபலனும் இன்றி அளிப்பதால் அத்தகைய சூழலில் நாம் பெறும் வாழ்வியல் பயன்பாடு ஒன்றுமில்லை.

நூறு சதவீகித நன்மைகள் செய்து வாழ்வதென்பது கடவுளை ஏற்காத வாழ்வில் சாத்தியமில்லை! என்பதைவிட பிரதிபலனற்ற நன்மைகளை செய்ய மனம் இயல்பாகவே அவ்விடத்தில் பணிக்காது என்பதே உண்மை.

அப்போ கடவுளை ஏற்பவர்களால் மட்டும் தான் நூறு சதவீகிதம் நன்மையை செய்ய முடியுமா..?
 இல்லை... ஆனால் நன்மை செய்வதற்கான அதிகபட்ச வாய்ப்பு கடவுளை மறுப்பவர்களை விட ஏற்பவர்களுக்கே இருக்கிறது. ஏனெனில் மேற்கண்ட நிலையில் செய்யும் நன்மைகளுக்கு சமூகமத்தியில் பலன்கிட்டா விட்டாலும் இறைவனிடத்தில் அதற்கான பிரதிப்பலன் உண்டு என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படும்.


சரி தீமைக்கு வருவோம்.


  நன்மை!  அதை செய்யாவிட்டால் கூட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் தீமை நிச்சயம் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
  • செல்வந்தர்கள் தம் புகழ் பழிக்கப்பட்டு சமூகத்தில் தனது அந்தஸ்து பாழாக்கப்படும் என்ற எண்ணத்திலும்
  •  ஏழைகள் தனது வறுமையின் காரணமாக பிறருக்கு அஞ்சுவதுமே 
                தீமைகள் செய்வதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு தோதுவான காரணிகள். மாறாக கடவுளின் மீதான பயமில்லை .. என "மக்களின் சமூகரீதியான தீமைக்குறைவுக்கு" நாத்திகர்கள் காரணங்கள் சொல்கின்றனர்.
சரி, உடன்படுவோம்.  இவையெல்லாம் அவர்களின் எண்ணங்கள் சீராக ஒரே நேர்க்கோட்டில் இறுதிவரை பயணித்தால் மட்டுமே சாத்தியம்! 

   ஆனால் மனித மனங்கள் இயக்க சூழ்நிலையை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுவதால் நேரத்திற்கு தகுந்தார்போல் நெகிழ்வுத்தன்மை உடையது. ஆக
செல்வந்தர்கள் தம் புகழின் துணைக்கொண்டு தவறு செய்ய தொடங்கினால் ,  ஏழைகள் தம் செல்வ நிலையை பெருக்க வேண்டும் என தீர்மானித்து எப்படியும் வாழலாம் என முடிவெடுத்தால்...

வெயிட்...
அப்படி அவங்க வாழ்ந்தாலும் சட்டங்கள் போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம் ஏன்.. மீறும் மக்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் தானே! 

  குட்!. ஆனால் மனித சட்டங்கள் என்பது நூறு சதவீகிதம் முழுமையடையாத ஒன்று. ஏனெனில் ஒரு மனிதரின் அறிவை தாண்டி ஒருவரால் சிந்திக்க முடியாது. அவ்வறிவை அடிப்படையாக வைத்தே எந்த ஒன்றையும் சரி தவறு என அவரால் இனங்காண முடியும். ஆனால் அவரைக்காட்டிலும் பிறிதொருவரின் அறிவு சற்றுக்கூடுதலாக அங்கே செயல்பட்டால் முன்னவரின் முடிவில் இருக்கும் சரி தவறை மேலும் தெளிவாக வரையறுக்கும்.

   மூன்றாம் நபர் இன்னும் அறிவுமிகுந்தவராக இருப்பின்...  சரி / தவறை அறியும் விகிதம் அதிகரித்துக்கொண்டே போகும். இப்படியாக அதன் நம்பக தன்மை விரிவடைந்துக்கொண்டே இறுதிவரை போகும்.இது எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும். இதனடிப்படையில் மனித உருவாக்கச்சட்டங்கள் என்றுமே முழுமை பெறாத ஒன்று!

சரிங்க... கண்டுப்பிடிக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை கொடுக்க தானே செய்யுறோம் அப்புறம் என்ன...?

 இருக்கலாம்! ஆனா
 குற்றங்களின் நிருபணம் என்பது கண்ட, கேட்ட, பார்த்த சாட்சியங்களை வைத்தும் , அந்நிகழ்வோடு ஓத்துபோகும் பெரும்பான்மை செய்கைகளின் முடிவுகளுமே தண்டனையை தீர்மானிக்கிறது.

 மேற்கண்ட இரு நிலைகளிலும் "அதுவரை" தெரிவுறுத்தப்பட்ட வற்றை மட்டும் வைத்து சரியென ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவற்றை மையப்படுத்தி மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படுவதால் ஒரு நிலையில் குற்றவாளிகள் கூட தப்புவதற்கும்- நல்லவர்கள் தண்டனையுள்ளாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அப்படியில்லாமல் நன்கு விசாரிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிக்கு தண்டனைகள் வழங்கப்பட்டாலும் அவையும் ஒருவர் மேற்கொண்ட குற்றத்தின் அளவிற்கு அளிக்கமுடியாது

உதாரணமாக ஒருகொலைக்கு பதிலாக குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தரப்படுவதாக கொள்வோம்.
  ஒரு கொலை செய்வதவனுக்கு ஒரு தூக்கு., மிக சரியான தீர்ப்பு
ஐந்து கொலைகள் செய்த ஒரு குற்றவாளியாக இருப்பீன்... என்ன?  ஐந்து முறை தூக்கா!
          1 :  1
          5 :  1 எப்படி இது நியாயமான தீர்ப்பாகும்...?

அதுவுமில்லாமல் இவையெல்லாம் சட்டத்தின் முன் கொண்டு வரப்படும் மனிதர்களுக்கு தான்!
 சட்டங்களில் சிக்கிக்கொள்ளாமல் மரிக்கும் வரை தீமைகளை செய்து வாழும் மனிதர்களுக்கு... மனித நீதிகளால் என்ன செய்ய முடியும் என்பதே இவ்விடத்தில் கேள்வி? 

தீமை செய்து வாழ்ந்து மனித சட்டங்களில் தப்பி மரணித்தாலும் நாளை கடவுள் முன் நிறுத்தப்படும் போது கண்டிப்பாக அத்தீமைக்கான தண்டனை வழங்கப்படும் என்றால்...

அவை நம்பமுடியாத கற்பனைக்கு உட்பட்ட இறை சட்டங்கள் என எள்ளி நகையாடுவோர் அதற்கான மாற்றுத்தீர்வை இவ்வுலகத்திலே ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பை இயற்கை இதுவரை ஏற்படுத்தவில்லை.. ஏன் உலகம் அழியும் நாள்வரையிலும் ஏற்படுத்தவும் போவதில்லை.

கடவுளின் தலையீடு ஒன்றே அதிகப்பட்சமாக நன்மை செய்வதற்கும் தீமை செய்வதிலிருந்து விலகி இருப்பதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வல்லது
 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பை நம்பா விட்டாலும் ,மனித உருவாக்க தீர்ப்புகள் முழுமையற்றவை என்பதை ஏற்றதாக தான் வேண்டும். பொறுத்திருப்போம் என்ன சொல்லுகிறதென நாத்திகம்!

                                                                அல்லாஹ் நன்கு அறிந்தவன்


read more "கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?"

Tuesday, November 29, 2011

இது 'திருடி' போட்ட பதிவு!


3D! 
   பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு நன்கு பரிச்சயமான வார்த்தையாக இருந்தாலும் தொழில் நுட்பம் சார்ந்தவர்களுக்கு அதிகம் பயன்பாட்டுமிக்க வார்த்தை இது. 3D என்றால் சட்டென நினைவுக்கு வருவது இதன் ஊடாக எடுக்கப்பட்ட ஆங்கில மற்றும் அனிமேஷன் திரைப்படங்கள் தான். அவைகள் 3D தொழில் நுட்பத்தின் முதிர்ச்சி தான் தவிர முழுவதும் திரைப்படங்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல அதன் நுட்பங்கள்...

முப்பரிமாணம் 
  3D என்று சுருக்கமாக சொல்லப்படுகின்ற Three Dimensional என்பதன் தமிழாக்கம் முப்பரிமாணம் என்பதாகும். இதன் முக்கிய நிகழ்வு மாற்றம் சாதாரணமாக நாம் பார்க்கும் அல்லது நோக்கும் ஒரு பொருளின் நீள, அகல, உயர அளவுகளை ஒருங்கிணைத்து காட்டி நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி தரும் .
     பெரும்பாலும் இது இயற்பியல் மற்றும் பொறியியல் துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முப்பரிமாண தோற்றத்தின் மூலம் ஒரு பொருளின் அமைப்பை மற்றும் வடிவத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.


    3D தொழில் நுட்ப யுக்தி வணிக ரீதியாக இன்றும் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் விளையாட்டுகளிலும் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது . மேலும் பொழுதுப்போக்குத்துறையிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது 3D பயன்படுத்தி சில புகைப்படங்களும் உருவாக்கப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட சில புகைப்படங்களை காணுவதற்கே இப்பதிவு


அதற்கு முன்பாக,
இந்த வகை புகைப்படங்களை சாதரணமான நிலையில் எளிதாக பார்வையிட முடியாது. முதலில் இரு கண்களையும் ஒரே இடம் நோக்கி சீராக இணைக்க வேண்டும். அதாவது நம் இருகண்களும் மூக்கை பார்க்கும் வண்ணம் ஒரே மூலையில் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு முன் நமது மானிட்டரின் மையப்பகுதி நமது கண்ணிற்கு நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 

   இந்த முறை படங்கள் அதற்குரிய தோற்றத்தில் நேரிடையாக தெரியாது. மாறாக அதன் வடிவில் மட்டுமே தெரியும். அதாவது ஜஸ்கிரீமில் ஒரு பகுதி எடுக்கும் போது, எடுக்கப்பட்ட பகுதியில் எப்படி குழியாக தோன்றுமோ அந்த அமைப்பில் இவ்வமைப்பு படங்கள் தெரியும். படங்கள் மிக தெளிவாக உங்களுக்கு தெரிந்தவுடன் உங்களுக்கும் அப்படத்திற்கும் உள்ள இடைவெளியே பின்னோக்கி, அதிகப்படுத்தினால் அப்படத்தின் உள்ளளவு அதிகரித்துக்கொண்டே போகும்.
சரிவர பார்க்கமுடியவில்லையென்றால் நான்காம் படத்தை மட்டும் முயற்சிக்கவும்.


முதலில் எளிதாக ஒரு படம்
இந்த மஞ்சள் நிறப்படத்தில் மேற்சொன்ன முறையே பயன்படுத்தி பார்வையிட்டால்., நடுவிற்கு சற்று நகர்ந்து இடதுபக்கத்தில் ஒரு கோழிக்குஞ்சு ஒன்று உள்ளதை பார்க்கலாம். 



அடுத்து, (2)
இந்த படத்தில் ஆறு செங்குத்தான மலை வடிவ கூம்புகளும் அவற்றிற்கு இடையிடையே குழிகளும் இருக்கிறது., இன்னும் எளிதாக சொல்வதாக இருந்தால் நமது வீட்டில் உபயோகப்படுத்தும் இட்லி சட்டிப்போன்று பள்ளங்களும் மேடுகளும்..



அடுத்து,(3)
இந்த படத்தின் விளைவை எளிதாக விளங்கிக்கொள்ளலாம்., அதாவது நடுவில் இருக்கும் நீல வண்ணக்கோடு சாதாரணமாக பார்பதற்கு மேலெழும்பி இருப்பதுப்போல் தோன்றினாலும்., உண்மையாக 3ட் அமைப்பில் பார்க்கும் போது மிக செங்குத்தாக கீழ் நோக்கி போகிறது. கீழ் நோக்கி செல்லும் இருப்பக்க நீலகோடுகளையும் நடுவில் இருக்கும் வெள்ளை நிறக்கோடு இறுதியில் ஒரே புள்ளியில் இணைக்கிறது.



இறுதியாக, (4)
இவ்வமைப்பு புகைப்படங்களில் இதை, மாஸ்டர் பீஸ் என்றே சொல்லலாம். ரோஜாக்களின் பின்னணியில் தெரியும் இந்த புகைப்படத்தில் நடுவில் ஒரு ஹார்ட் (வடிவம்) தெளிவாக இருக்கிறது. (தொண்ணுறாம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆனந்த விகடனின் பின்பக்க அட்டைப்படத்தில் இப்படத்தை பார்த்ததாக நினைவு.)


            தொடக்க காலத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களே இவை. ஆனால் இதை பார்வையிடுவதை காட்டிலும் இன்னும் எளிதாக Stereoscopic imaging எனப்படும் முப்பரிமாண படிம படங்களால் பார்வையிட முடியும் 
* * *

முப்பரிமாண படிமம், 
  ஓர் படிமத்தில் உயரம்,அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் மூன்று பிரிமாணங்களில் காட்சித் தகவலை பதிவதற்கும் திறனுள்ள நுட்பமாகும். 

  ஒவ்வொரு கண்ணிற்கும் சற்றே வேறுபட்ட படிமத்தை ஏற்படுத்தி இருப்படத்திலும் ஒரே இயல்புத்தன்மையே உருவாக்குகிறது. பல முப்பரிமாண காட்சிகள் இந்த நுட்பத்தையே பயன்படுத்துகின்றன. இதனை முதலில் சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் 1840ஆம் ஆண்டு கண்டறிந்தார். இவ்வகை படிமங்கள் 3D ஒளிவருடிகளை கொண்டு உருவாக்கப்படுகின்றன.

படங்களின் துல்லியம், தெளிவு, நம் கண் முன்னே இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தும் பிரமிப்பு -இவ்வகை புகைப்படத்தின் கூடுதல் சிறப்பு.

இவ்வகைப்படத்திற்கு அதிக சிரத்தை தேவையில்லை. இருக்கும் இரண்டு படங்களை ஒரே படமாக இருக்குமாறு ஒன்றின் மீது ஒன்றை அடுக்கும் வண்ணம் கண்களை சுழற்றினால் போதும். கீழுள்ள படத்தில் இன்னும் எளிதாக இதை அறியலாம்.






இதனடிப்படையில் முதல் படத்தை பார்வையிவோம்.
அழகான மணல் திட்டு மேல் நோக்கியும் அதில் இருக்கும் இரண்டு குழிகள் கீழ் நோக்கி இருப்பதை காணலாம்.



(2)
மிக நேர்த்தியான படம்., தேரை மட்டும் தெளிவாக அதன் பின்புலங்கள் மிக தொலைவில் மிக அருமையான புகைப்படம்



 (3)
உருக்கப்பட்ட நெருப்புப்போல்... பிளக்கப்பட்ட பளிங்கு கல் போல... இடை இடையிலே பள்ளம்



 (4)
இம்முறையில் இது ஒரு வித்தியாசமான படம் என்றே சொல்லலாம். முன்னே தெரியும் குட்டி டைனோசரஸ் 3D அமைப்பில் பின்னோக்கி இருக்கிறது..



 (5)
இப்புகைப்படமும் 3D தொழில் நுட்பத்திற்கொரு சான்று! வலமிருந்து இடமாக வளைந்து செல்லும் பாலம் அத்தோடு எங்கோ தெரியும் ஆரஞ்சு நிற போர்டு., பார்த்தால் பிரமிப்பை தான் ஏற்படுத்தும்.



(6)
சுவாலைகள் முன்னும் பின்னும் ....





இறுதியாக (7)
நான் பிரமித்த புகைப்படம் இது தொழில் நுடபத்தின் விளைவு மிக நேர்த்தி! திறக்கப்பட்ட கதவு முன்னோக்கி...அதிலும் இடது பக்கம் தெளிவாய் தெரியும் தாழ்பாள், தூரத்தில் மரங்கள்... அவசியம் பார்வையிட வேண்டிய புகைப்படம்...



   இந்த பதிவிற்கு இது 3D போட்டோ பதிவு என பெயரிட நினைத்தேன் எனினும் இது தொழில் நுட்பம் சார்ந்த பதிவேன நினைத்து வருபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்! இன்னும் crossed eye 3d photos என தேடினால் அனேக புகைப்படங்கள் அணிவகுக்கின்றன., நீங்களும் பார்வையிடுங்கள்., 


நன்றி
1.சகோ ஆமினா
2.சகோ ஜெயமாறன்
3. சகோ நிருபன்

Ref:


read more "இது 'திருடி' போட்ட பதிவு!"

Monday, November 21, 2011

நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி...

                                         ஓரிறையின் நற்பெயரால்.

     பொதுவாக எல்லா மதம் சார்ந்த / சாரா கொள்கைகள் நன்மை செய்வதை முன்னிலைப்படுத்தி கோட்பாடுகளை வகுத்தாலும் ஏனைய மதங்களை விட இஸ்லாமே நாத்திகவாதிகளால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

 ஏனெனில் ஏனைய கொள்கைகள் போல நன்மைகள் மேற்கொள்வதை முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, அதன் எதிர் விளைவான தீமையை தடுக்கவும் இஸ்லாம் அதை பின்பற்றுவோர் மீது சமூக கடமையாக பணிக்கிறது.

  ஆக அதனடிப்படையில் இன்று எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் இஸ்லாமியர்கள் அவரவர் பங்களிப்பை முடிந்த வரையில் அளித்து வருகிறார்கள்.  குறிப்பாக இணையத்தில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது., எல்லா துறைச்சார்ந்த கோட்பாடுகளை விளக்கும் தளங்களை விட இஸ்லாத்தை விளக்கும் தளங்கள் தமிழில் அதிகம்., நான் வாசித்த வரையில் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் மேலாக இருக்கிறது 

   ஒரு கொள்கையை விளக்கும் போது நேர்மறை எதிர்மறை கருத்துக்கள் எழ தான் செய்யும் ஆனால் எந்த ஓரு நிகழ்வையும் ஏற்பதும் மறுப்பதும் ஒருவரது நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட விஷயம். ஆனால் தான் கொண்ட கொள்கை தான் உண்மையானது எனக் கூறி பிறரை ஏற்க செய்வதாக இருந்தால் அச்செய்கையை பொதுவில் நிறுத்தி, 
  • அறிவியல் ரீதியாக 
  • தர்க்கரீதியாக 

     ஒன்றின் கீழாக நிறுத்தி அவை விளக்கப்பட வேண்டும். அது இஸ்லாத்திற்கும் பொருந்தும் -நாத்திகத்திற்கும் பொருந்தும்., ஆனால் இஸ்லாம் எப்படி குர்-ஆன் சுன்னாவை முன்னிருத்தி பிறரை தன்பால் அழைக்கிறதோ, அதுப்போல நாத்திகம் அதுக்கொண்ட கொள்கையே முன்னிருத்தி அழைப்பதில்லை. மாறாக ஒரு நிலையில் இஸ்லாத்தை விமர்சித்து -தவறான புரிதலுடன் குற்றப்படுத்தி தம் கொள்கையை பறைச்சாற்றுகிறது. எண்ணற்ற தளங்கள் இஸ்லாம் சார்ந்த விமர்சனத்திற்கு / குற்றச்சாட்டிற்கு தெளிவான விரிவான விளக்கம் தந்துக்கொண்ட இருக்கின்றன.

     மேலும் ஒரு கோணத்தில் உயிரின தோற்றத்தின் மூலத்திற்கு பரிணாமத்தை அடிப்படையாக கொண்ட சித்தாந்தத்தை அறிவியலாகவும்,  கண் முன் இல்லா கடவுளை ஏற்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாது என தர்க்க ரீதியாகவும் வாதமெழுப்ப நாத்திகம் முயல்கிறது., அவற்றை மறுக்கும் விதமாக கீழ்கண்ட தளங்களில்  நாத்திகத்தை பொய்ப்பித்து படைப்பியல் கொள்கையை நிறுவ இஸ்லாத்தை முன்னிருத்தாமல் அவர்களிலும் வழியிலேயே பரிணாமம் -கடவுள் -கம்யூனிசம் குறித்து ஆய்வு ரீதியாவும் தர்க்கரீதியாகவும் ஆக்கங்களை வெளியிடுகிறது.



     நீங்களும் பார்வையிடுங்கள் இந்த ஆக்கங்கள் சமூக பயன்பாடு உடையது என நீங்கள் நினைத்தால் இந்த பதிவை மீள்பதிவாகவோ அல்லது தனிப்பக்கமாகவோ உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுங்கள். குறைந்த பட்சம் நாத்திக சகோதரர்களுக்காவது இப்பக்கத்தை அறிய செய்யுங்கள். 


* * *

" சகோதரர் ஆஷிக் அஹ்மத்தின் பரிணாமம் குறித்த பதிவுகள் "  
  

1. பரிணாமவியலாளர்கள் செய்த பித்தலாட்டங்கள், 
2. பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குவதிலேயே குழப்பங்கள் இருப்பது, 
3. முதன் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படும் உயிரினங்கள் திடீரென தோன்றியிருப்பது, 
4. பெரும்பாலான உயிரினங்கள் மாற்றமடையால் தொடர்ந்தது, 
5. பரிணாமவியலாளர்களுக்குள் இருக்கும் குழப்பங்கள், 
6. நவீன வர்ணாசிரமமாக மனிதர்களிடையே இனபேதத்தை கற்பித்து பலரின் அழிவுக்கு காரணமாக பரிணாமம் இருந்தது மற்றும் ஹிட்லரின் வெறிக்கு பின்னால் முக்கிய காரணகர்த்தாவாக பரிணாமம் இருந்தது,
7. ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இறைநம்பிக்கையாளர்களாக இருப்பது, 
8. பரிணாமம் குறித்து மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள்,
9. பரிணாமம் குறித்து ஆசிரியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள்.
10. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தானா?
11. பரிணாமம் உண்மையாக இருந்தால் கூட அதனை வைத்து இறைவனை மறுக்க முடியுமா? 

12. பரிணாமத்தின் துணை கொண்டு நடந்த அட்டுழியங்கள் - மனித ZOO 


மேலும் பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள்

1. எழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்திற்கு - I 
2. புரியாதப் புதிர்கள்..
3. Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?
4. பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?
5. பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்? 
6. Evolution St(he)ory > Harry Potter Stories - I
7. Evolution St(he)ory > Harry Potter Stories - II
8. Evolution St(he)ory > Harry Potter Stories - III
9. Evolution St(he)ory > Harry Potter Stories - IV 
10. தற்செயலாய் வீடு உருவாகுமா?
11. "செயற்கை செல்(?)" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா நாத்திகத்தையா? 
12. Evolution St(he)ory > Harry Potter Stories - V
13. (பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா?
14. Evolution St(he)ory > Harry Potter Stories - VI
15. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - I
16. சில ஆச்சர்யங்கள், சில கேள்விகள் - II
17. இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு?
18. Evolution St(he)ory > Harry Potter Stories - VII 
19. தயங்குகின்றார்களாம் ஆசிரியர்கள்...பரிணாமத்தை ஆதரிக்க !!!!!!!!!!! 
20. விஞ்ஞானிகளால் உயிர்பெற்ற பெண்ணடிமைத்தனம்...  
21. டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி? யார் தவறு?
22. உலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...
23. உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie
24. மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்... 

25. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்.

* * *






" சகோதரர் பைசலின் பரிணாமம் குறித்த பதிவுகள் ".
     


* * *



" சகோதரர் ஹைதரின் கம்யூனிசம் குறித்த பதிவுகள். "
     


அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி..."

Wednesday, November 16, 2011

இயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..?


                                          ஓரிறையின் நற்பெயரால்
   
     கடவுளின் செயல்களாக சொல்வதையெல்லாம் மறுப்பதற்கு இயற்கை என்ற சொல்லாடலை நாத்திகர்கள் முன்னிருத்துகிறார்கள்.,  குறிப்பாக உலக உருவாக்கம், உயிரின வாழ்வுக்குறித்து இரு தரப்பிலும் வாதங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

  அனைத்து நிகழ்வுகளும் இறை விதிப்படியே நடப்பதாக கடவுளை ஏற்போர் கூறினாலும் அதை மறுக்கும் நாத்திக கொள்கை இயற்கை அல்லது தற்செயல் என்ற நிலையை எல்லா செயல்களிலும் நிறுவ முயல்கிறது
 
      தற்செயல் என்பது எந்த வித முன்னேற்பாடோ அல்லது திட்டமிடலோ இன்றி திடீரென நிகழ்வுறும் ஒரு நிகழ்வாகும். அதுவும் ஒழுங்கமைப்புடன் நிகழ ஆயிரத்தில் ஒரு மடங்கே சாத்தியம், அதிலும் அச்செயல் ஒரே நேர்க்கோட்டில் தொடர்ந்திருக்க கோடியில் ஒரு மடங்கே வாய்ப்புண்டு!

  ஆக உலக உருவாக்கத்திற்கு பெருவெடிப்புக்கொள்கை வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்தைய நிலையை விளக்க வழியின்றி திடீரென ஏற்பட்ட தற்செயலின் விளைவு என முற்றுப்புள்ளி வைக்கிறது.

பால்வெளியில் பூமி உட்பட ஏனைய கோள்கள் தொடர்ந்து இயங்குவது குறிப்பாய் தத்தமது நீள்வட்ட பாதையில் தனித்தன்மையுடன் வலம்வருவது தற்செயல் அல்லது திடீரென ஏற்பட்ட செயலின் விளைவு என்பது ஏற்றுக்கொள்ளும் வாதமா...?

இங்கு இயற்கை-மனித வாழ்வை முன்னிலைப்படுத்தி பதிவிடுவதால் உலக உருவாக்கம் குறித்து மேலும் தொடரவில்லை.

  ஏனைய எல்லா நிலைகளிலும் இயற்கையை இறைவனுக்கு மறுப்பாக கொணர்ந்த போதிலும் உயிரினங்களின் வாழ்வு தொடர்பான செய்கைகளில் இயற்கை பெரிதும் முன்னிலைப்படுத்தபடுகிறது. இயற்கையோடு உயிரினங்களுக்கு உள்ள தொடர்பை குறித்துக்காண்போமேயானால்,

       இயற்கையானது, வாழும் காலம்- சூழல் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு தகுந்தாற்போல் எந்த ஒரு உயிரினத்தின் உடல் அமைப்புகளை தேர்வு செய்து அவ்விடங்களில் வாழ வழியும் ஏற்படுத்தி இருக்கிறது. அத்தோடு வாழ்வியல் ஆதாரத்திற்கு தேவையான உணவுகளை ஏற்படுத்தியும் அவ்வுயிர்களின் சந்ததி நிலைக்கும் வகையில் இனப்பெருக்கம் செய்யும் வழிமுறையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால் இந்த பொதுத்தன்மை மனிதன் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் சீராக ஓரே மாதிரி அமைக்கப்பெற்றிருந்தால் எல்லாவற்றிற்கும் இயற்கை ஒன்றே போதுமானது என்ற நிலைப்பாட்டிற்கு ஓரளவிற்கு வர வாய்ப்பிருக்கிறது.,

  ஆனால் ஏனைய உயிரினங்களுக்கு இயற்கை அளிக்கும் நிலைகள் மனிதனுக்கு மட்டும் எதிர்விகிதத்தில் முற்றிலும் மாறுபட்டு இருப்பது இயல்பாக பல கேள்விகளை நமக்கு ஏற்படுத்துகிறது.

 உதாரணத்திற்கு உயிரினங்களின் பிறப்பை எடுத்துக்கொள்வோம்,

  • மீன்களை எடுத்துக்கொண்டால், பிறந்தப் பொழுதிலிருந்தே அவை நீந்துவதற்கு கற்றுக்கொள்கின்றன. 
  • அதுப்போல கால் நடைகள் பிறந்த சிலமணி நேரங்களிலே எழுந்து நிற்பதுடன் இல்லாமல், ஆச்சரியம்! தம் தாயின் மடி தேடிச் சென்று பாலருந்தவும் செய்கின்றன.
  • பறவைகளோ சில நாட்களுக்கு பிறகு தம் இறக்கை வளர்ந்தவுடன் எந்த வித செய்முறைபயிற்சியுமின்றி இலகுவாக இயல்பாக விண்ணில் பறக்கிறது...

     இவை அனைத்து உயிரின செயல்களின் மூலத்தை தெரிவு செய்தது இயற்கையென்றால் அதே இயற்கை மனிதனுக்கும் அதே நிலையில் தன் இனம் சார்ந்த செய்கைகளை இயல்பாகவே தாங்கி பிறப்பிக்க செய்திருக்க வேண்டும் ஆனால்..?


  பிறக்கும் போதே ஏதுமறியா நிலைக்கொண்ட மனிதன் குறிப்பாக பிறந்து ஒரு மாதம் வரை படுத்த வாக்கிலே இருக்கிறான். நான்காம் மாதத்திலே தனது கைகளைத் தரையில் ஊன்றித் தலையைத் தூக்கிப் பார்க்க முயற்சிக்கிறான்.
 
        ஐந்தாம் மாதத்தில் உட்கார பழகும் மனிதன் ஆறாம் மாத்திலே எழ முயற்சிக்கிறான். எட்டாம் மாதத்திலே மெல்ல மெல்ல நடக்க கற்றுக்கொள்கிறான். எதையாவது பிடித்துக்கொண்டு பயணிக்க மனிதனுக்கு முழுதாய் ஒரு வருடம் தேவைப்படுகிறது.,

    பின்பே ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை உபயோகித்துப் பொருட்களை எடுக்கக் கற்றுக் கொள்கிறான். இப்படி அடிப்படை செய்கைகளை கற்றுக்கொள்வதற்கே ஒருசில வருடங்கள் ஆகின்றது . அதற்கு பிறகே பேச்சும், பிறர் செய்கைகளை புரிந்துக்கொள்ளும் உணர்வும் அடைகிறான்., என்பதும் நாம் அறிந்த ஒன்றே..!
This quote taken from senthilvayal.wordpress

எல்லா உயிர்களுக்கும் தன் இனம்சார்ந்த செயல்களுடன் பிறப்பின் தொடக்கத்தை தேர்வு செய்யும் இயற்கை மனிதனுக்கு மட்டும் பூஜ்ய நிலை தொடக்கத்தை ஏன் தர வேண்டும்?

   உயிரினங்களின் தகவமைப்புக்கு தக்கவாறு எந்த ஒரு உயிரின் தொடக்கத்தை இயற்கை தீர்மானிப்பது உண்மையென்றால் மற்ற உயிரிகளை விட மனிதனுக்கே தம் இனம்சார்ந்த இயல்பு நிலை பண்புகள் பிறக்கும் போதே அளிக்கப்பட்டிருக்க வேண்டும் - ஆனால் இவ்விடத்தில் இயற்கை அந்நிலையே தேர்ந்தேடுத்து அளிக்கவில்லையே அது ஏன்?

 எனினும் பிற்காலத்தில் பூஜ்ய தொடக்கத்தை ஆரம்பமாகக் கொண்டு வாழ்வை துவக்கிய மனிதன் பிறப்பிலேயே சிறப்பியல்கூறுகளை அதிகம் கொண்ட ஏனைய உயிரினங்களை விட எல்லா நிலைகளிலும் முதிர்ச்சி பெறுகிறான். இப்படியொரு தலைகீழ் மாற்றத்தை இயற்கை ஏன் தேர்வு செய்து வைத்திருக்கவேண்டும்..? 

இவை மட்டுமில்லாது, ஏனைய உயிர்களுக்கு வழங்கப்படாத வாழ்வியலுக்கு உகந்த செயல்பாடுகளை மனிதனுக்கு மட்டும் தேர்வு செய்து இயற்கை வழங்க காரணமென்ன?

அதாவது வெட்கம், ஒழுக்கம், இனவிருத்தி செய்வதில் வரையறை, போன்ற வாழ்வதாரத்திற்கு சிறிதும் தேவையற்ற நிலைகளை மனிதனுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஏன் ஏற்படுத்தியது? மேலும் எதை அடிப்படையாக வைத்து நன்மை- தீமைகளை பிரிந்தறிந்து நன்மையை மட்டும் மேற்கொள்வது சிறந்தது எனும் பண்பியல் கூறுகளை இயற்கை கற்றுக்கொடுத்து?

இயற்கை என்ற ஒன்றே மனிதன் உட்பட அனைத்துயிர்களின் வாழ்வை தீர்மானித்து நடத்துவதாக கொண்டால் மேற்கொண்ட கேள்விகளுக்கு இயற்கையே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பவர்கள் பதில் தந்தாக வேண்டும்?

   ஏனெனில் இறைவனின் செய்கைகளை திசை திருப்புவதற்கு இயற்கை ஒன்றையே தீர்வாக கொண்டிருப்பவர்கள், அந்த இயற்கை எல்லா விளைவுகளுக்கும் தெளிவான காரணங்களை கொண்டிருக்கவில்லை என்பதை உணர மேற்சொன்ன சிறு உதாரணமே போதுமானது.,

   ஆக இயற்கை என்பது எதிர்கேள்விகளுக்கு உட்படாத தன்மைகளை கொண்ட விசயங்களில் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பதில் தரும்., மாறாக பொதுவில் நிறுத்தும் எல்லாவற்றிற்கும் பதில் தராது. ஆக இயற்கை என்பது எல்லா செய்கைகளின் முடிவுறுத்தப்பட்ட தீர்வல்ல. மாறாக தீர்மானித்தவனின் முடிவுறுத்தப்பட்ட செய்கைகளில் ஒன்று.

  ஆக எந்நிலையில் பதில் இயற்கைக்கே தேவைப்படுகின்றதோ அல்லது இயற்கையால் தேடப்படுகின்றதோ அங்கு இறைவன் இருப்பு அவசியமாக்கப்படுகிறது.,  எப்போதும் பதில்களின்றி தேங்கி நிற்கும் எண்ணற்ற நிலைகள் இறைவனின் இருப்பை தெரிவு செய்பவைகளாகதான் இருக்கின்றன.

 ஏனெனில் எந்த ஒரு நிகழ்வின் விளைவுக்கும் ஒரு நிலைக்கு மேல் நம்மால் காரணம் தேடமுடியவில்லையோ அங்கு நம் அறிவை விஞ்சிய வேறோன்றின் தலையீடு இருக்க வேண்டும் என்பது எண்ணுவதே சிந்தனையுள்ள எவரும் ஓப்புக்கொள்ளும் வாதம்!

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (03:190))

                                                    அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

read more "இயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..?"

Tuesday, November 01, 2011

அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..!

                                    ஓரிறையின் நற்பெயரால்
  •  உங்களுக்கு படிக்கும் வயதில் குழந்தை இருக்கிறார்களா...? 
  • அதுவும் சுமாராக தான் படிக்கிறார்களா..? 

அப்போ கண்டிப்பாக இந்த ஆக்கம் பயன்படும்... அவர்களுக்கு இல்லை... பெற்றோர்களான உங்களுக்கு..!

 "தந்தை தன் மக்களுக்கு அளித்திடும் அன்பளிப்புக்களில் மிகச் சிறந்தது நல்ல கல்வியாகும்..!" 
 -நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள்
[நூல்: திர்மிதீ; அறிவிப்பாளர்: ஸயீது பின் ஆஸ்(ரலி)].

     நம்மில் பலருக்கும், ஏன் அனைவருக்குமே தம் பிள்ளைகள் நல்ல முறையில் கல்வி கற்கவேண்டும்., அதனடிப்படையில் நல்ல வேலை வாய்ப்பு, வசதிப்பெற்று சமூகத்தில் வாழவேண்டும் என்பது தான் தம்மோடு கலந்து விட்ட இறந்த காலம் தொடங்கி எதிர்காலத்திலும் நீடிக்கும் கனவாக இருந்தது -இருக்கிறது!.

  குறைந்த பட்சம் தான் படித்த அளவைக்காட்டிலும் சற்றுக்கூடுதலாக தம் பிள்ளைகள் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான நடுத்தர வர்க்க பெற்றோர்களின் வாழ்க்கையில் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கின்றது.

   ஆக பிள்ளைகளின் எதிர்க்காலம் மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் கல்விக்காக தங்களின் நிகழ்காலத்தை பொருளாரதாரரீதியாகவும் - உடலியல் செய்கைரீதியாகவும் பெற்றோர்கள் செலவழிக்கிறார்கள்.

பிள்ளைகளின் கல்வியின் திறனை அதிகரிக்கும் நோக்கில் சில நிகழ்வுகளை பெரும்பாலான பெற்றோர்கள் மேற்கொள்கின்றனர்

1. சரியாக படிக்காத, பள்ளிக்கு செல்லாத காரணத்தால் அவர்களை திட்டுதல் அல்லது அடித்தல்
2. ஏனைய மாணவர்களுடன் தம் பிள்ளைகளின் கல்வி திறனை ஒப்பீட்டுக்குறை கூறுதல்.
3. முதல் தரம் வாங்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் ,சக பிள்ளைகள் மத்தியில் பாராட்டுதல்.

  மேற்கண்ட நிலைகள் வெளிப்படையாக, அவர்களின் மேம்படும் கல்விக்கான வழிமுறை செயலாக தெரிந்தாலும் இவற்றால் நேரடி மற்றும் மறைமுக எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது- இதை விளக்கவே இவ்வாக்கம்.,

    சரியாக படிக்காத அல்லது பள்ளிக்கு ஒழுங்காக செல்லாத காரணத்தால் பிள்ளைகளை திட்டுதல் அல்லது அடித்தல் என்பது அவர்களின் எண்ணங்களை குறைந்த விகிதமே மாற்றவல்லது., ஏனெனில் அடி, திட்டுக்கு பயந்து தான் பள்ளிக்கு செல்வார்களே, தவிர உண்மையாக பிற்கால பயன்பாட்டை கருதி செல்லமாட்டார்கள், அதுவும் குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தான் ,ஏனெனில் இதே நிலை தொடரும் போது பெற்றோர்கள் மீதான பயம் வெறுப்பாக மாறி அவர்களின் அன்பையும் தூக்கியெறிய நேரிடும்.

   ஆக பள்ளிக்கு செல்லவில்லையென்றால் அடித்தல் திட்டுதல் போன்றவை ஆரோக்கியமற்ற எதிர்விளைவை தான் எற்படுத்தும். அப்படி ஏற்படும் நேர்மறை விளைவுகளாக இருப்பினும் கூட அவை தற்காலிகமானதுதான் தவிர நன்மையின்பால் நிரந்தர தீர்வை எற்படுத்தாது.

   அடுத்து, தம் பிள்ளைகளின் கல்வியின் நிலையை சக பிள்ளைகளோடு ஒப்பிட்டு அறிவது., 
 இது மிகப்பெரிய தவறான வழிமுறையாகும். ஏனெனில் ஒப்பிடும் இரு நிகழ்வுகளின் விளைவு சமமாக இருக்கவேண்டுமென்றால் அவை இரண்டும் ஒரே நிலையை அடிப்படையாகக்கொண்ட காலம், சூழல் சமுக பிண்ணனி கொண்டதாக இருக்க வேண்டும் அப்போது தான் ஒப்பிடும் ஒன்றின் திறன் மற்றொன்றை விட கூடுதல் குறைவாக இருப்பின் குறைக்கூற முடியும்.,

   ஆனால் நம் பிள்ளைகளை ஏனைய மாணவர்களோடு ஒப்பிடும் போது இவற்றை கருத்தில் கொள்வது இல்லை., மாறாக அவன் நன்றாக படிக்கிறான் - இருவரும் ஒரே வகுப்பு என்ற பொது நிலை ஒப்பீட்டை மட்டுமே அங்கு அளவுக்கோலாகக் கொள்கிறோம்.

  மாறாக அவர்களின் குடும்பம்,  சார்ந்து இயங்கும் சூழல் மற்றும் வாழ்க்கை வசதிகளின் பிண்ணனியை முன்னிருத்தி ஒப்பு நோக்கிவதில்லை., இதனால் சரிவர படிக்காத பிள்ளைகளுக்கு தாழ்வு மனபான்மை ஏற்படுவதுடன் நம் சூழலும் அதுப்போல இல்லையே என சமுகத்தின் மீதான கோபம் அதிகரிக்கவும் செய்யும்.

மூன்றாவதும் மிக முக்கியமானதும் பரிசு வழங்குதல்...!
   முதல் தரம் எடுத்தால் பரிசு வழங்குதல் என்ற எதிர்வினையற்ற நன்மை தரும் ஒரு செய்கை எப்படி அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்...? என இதைப்படிக்கும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்., ஆனால் சில வேளைகளில் இச்செயல்பாடு மறைமுக பிரச்சனைகளை தான் உருவாக்கத்தான் செய்யும்.

    ஒரே விட்டில் இரு பிள்ளைகள் படிக்கும் போது கண்டிப்பாக இருவரும் சரிசமமான ஒரே விகித அளவில் படிக்க வாய்ப்பில்லை ஒருவரைக்காட்டிலும் ஒருவர் கூடுதல் அல்லது குறைவான கல்வித்திறனோடு தான் இருக்க வாய்ப்பு அதிகம்.,

  ஆக அச்சூழலில் முதல் தரம் எடுக்கும் பிள்ளைக்கு நாம் பரிசு வழங்குவது அல்லது அவன் கேட்டதை வாங்கி தருவது அவனது கல்வியை இன்னும் மேம்படுத்தும் என்பது ஒரு கோணத்தில் உண்மையாக இருந்தாலும் பிறிதோரு கோணத்தில் இரண்டு எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
  •  பெற்றோர்களின் பரிசு மற்றும் பாராட்டை கண்டிப்பாக பெற வேண்டும் என்ற நோக்கிலும், தம் நிலையை தொடர்ந்து முதல் தரத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆக்கிரமிப்பு எண்ணங்களும் தேர்வு நேரங்களில் அதிக முயற்சி, கடின உழைப்பு போன்றவற்றை தாண்டி முரண்பாடாய் ஒரு நிலைக்கு மேல் போய் பயமாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அத்தோடு தேர்வின் முடிவுகளில் தம் நிலையில் பின்னடைவு ஏற்பட்டால் தம்மால் தொடர் அந்தஸ்தை பெற்றோர்கள் மத்தியில் பெற முடியவில்லையே என்ற தேவைற்ற குற்ற உணர்ச்சி எண்ணங்கள் மனச்சிதைவை தான் ஏற்படுத்தும்.
  •  மேலும், தமக்கு மத்தியில் படிப்பிற்கேற்ப வெகுமதி வழங்கப்படும் நிலை தொடர்வதை கண்டு,  சரிவர படிக்க இயலாத பிள்ளைக்கு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக எண்ணி தம் பெற்றோர்கள் மீது கோபமும், தம் திறன் குறைபாடு உடையது, ஆக தம் பெற்றோர்கள் கவனம் நன்றாய் படிக்கும் அவனை நோக்கியே இருப்பதாக நினைத்து தாமாகவே உளவியல் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். உளவியல் ரீதியாக பிரச்சனைக்குள்ளாகும் போது...

புறிதிறன் அம்சங்களில் பெரும் அளவில், நரம்பியல் ரீதியான புரிதிறன் குறைபாடு, நினைவாற்றல், கவனம் செலுத்துதல், பிரச்சினைகளை தீர்த்தல், இயக்கச் செயல்பாடு, சமூகப் புரிதிறன் ஆகியவற்றில் மழுங்கிய விளைவு பிரதிபலிக்கக் கூடும். (விக்கி பிடியா)

வெவ்வெவ்வெவ்வே....

  ஆக பெற்றோர்களாகிய நாம்., முதலில் பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த செய்கைரீதியான மாற்றங்கள் ஏற்படுத்துவதை விட சிந்தனைரீதியான மாற்றங்கள் ஏற்படுத்துவதே காலச்சிறந்தது, அவர்களை திட்டுவதோ அடிப்பதோ அல்லாமல் அவர்கள் தாமாகவே முன்வந்து படிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.

   அதற்கான வழிமுறைகளில் முக்கியமானது, பிள்ளைகளுக்கு பெற்றோர்களாகிய நம் மீது முழு நம்பிக்கை ஏற்பட செய்ய வேண்டும். அதற்கு முன்பாக நாம் அவர்களுக்கு முழுவதுமான பாசத்தையும், நேசத்தையும் அளிக்கவேண்டும்.


ஏனெனில் ஒரு வினைக்கு மாற்றாக உருவாகும் எதிர்வினையானது அதிக அளவில் வெளிப்படுவதை விட அழகிய முறையில் வெளிபடுவதே சிறந்த ஒன்றாகும்

  ஆனால் மாறாக நாமோ பெரும்பாலும் அவர்களின் அறிவுக்கேற்ற செயல்பாடுகளை வைத்தே அவர்கள் மீது அன்பை வெளிப்படுத்துகிறோம். இது முற்றிலும் தவறான பண்பு. மனிதனை தவிர ஏனைய உயிரினங்கள் அனைத்தும் அன்பு செலுத்துவதற்கு அறிவை அளவுகோலாக பயன்படுத்துவதில்லை., ஆனால் நாம் மட்டுமே அன்பின் வெளிப்பாட்டிற்கு அறிவை ஒரு அளவுகோலாக வைத்திருக்கிறோம் அதன் தாக்கம் நம் பிள்ளைகளின் கல்வியிலும் தொடர்கிறது.,

     கல்வி என்பது அறிவுசார்ந்த விசயம்., அதில் அவர்கள் மேம்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லையென்ற போதிலும் கல்வித்திறனை மட்டும் அடிப்படையாக வைத்து பிள்ளைகளின் அன்பு தீர்மானிக்கப்படுவதுதான் வருத்தமானது., ஒரு டியுசன் டீச்சருக்கு இருக்கும் அக்கறைக்கூட சிலசமயம் பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகள் மீது இல்லாதது வேதனையான ஆச்சரியமே!!!

    சிந்தித்துப்பாருங்கள்.,  இன்று படிக்க வில்லையென்பதற்காக அவர்கள் மீது கோபமும் எரிச்சலும் வருத்தமும் அடையும் நாம்., அவர்கள் பிறக்காமல் நமக்கு பெற்றோர்களாகும் வாய்ப்பை ஏற்படுத்த விட்டால்..? இந்த சமூகத்தில், நம் மீதான விமர்சனம் எத்தகையது.,? குடும்ப சூழல், உறவின் முறை மத்தியில் நமக்கான பெயர் எப்படி இருக்கும்...? அந்நேரங்களில் நமக்கு கிடைக்கும் ஆலோசனைகளையும், அனுதாபங்களையும் விட நாம் அடையும் கோபமும் வருத்தமும் மிக அதிகம்.,

   நமக்கு இறை வழங்கிய மிகப்பெரும் அன்பளிப்பு குழந்தைகள்., அதற்காக நம் பிள்ளைகளுக்கு என்றும் நன்றி சொன்னது இல்லை.,  அதை நினைத்துக்கூட பார்த்ததும் கிடையாது, ஆக அதற்கு கைமாறாக அவர்களை ஒழுக்கசீலர்களாக சமுக பயன்பாட்டிற்கு உகந்தவர்களாக, மனித நேயமிக்கவர்களாக பொது நலம் பேணுபவர்களாக உருவாக்க வேண்டியது நமது கடமை. அதற்கு அவர்களின் கல்வியெனும் அறிவு மட்டும் அளவுகோல் அல்ல!

" நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே..நிச்சயமாக உங்களது பொறுப்புக்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்.."
                                                                                       -தூதர் மொழி

                                                           அல்லாஹ் மிக்க அறிந்தவன்
 
read more "அறிவில் இல்லை அன்பின் அளவுகோல்..!"

Monday, October 17, 2011

தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


                                             ஓரிறையின் நற்பெயரால்.,

    சமீபத்தில் தமிழ்மணம் சில வகை பதிவுகளை கட்டண சேவை பிரிவில் தொடர வேண்டி அறிவிப்பு வெளியிட்டு பதிவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.,
=====================================
இத்தலைப்பு தொடர்பாக நிறைய ஆக்கங்களை நீங்கள் காண இருப்பதால் சொல்ல வேண்டிய விசயம் குறித்து சுருக்கமாக இங்கே.,
=====================================
. . . 

 டெர்ரர் கும்மி என்ற வலைதளம் தமிழ்மணம் தொடர்பாக ஒரு காமெடிப்பதிவை .. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா என்ற பெயரில் வெளியிட்டது.,

 இப்பதிவிற்கு பெயரிலி என்ற பெயரில் தொடர்ந்து பின்னூட்டமிட்ட தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் தம் கோப மிகுதியால் இப்பதிவிற்கு சிறிதும் தொடர்பே இல்லாத

உங்கள் மீது சாந்தியும் (அமைதி) சமாதானமும் உண்டாவதாக..!! என்ற இஸ்லாமிய முகமனை திரித்து

// சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள். // 
 - என தமது பின்னூட்டத்தில் தேவையற்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

1. இப்பதிவு இஸ்லாமிய பதிவர்கள் எழுதிய பதிவும் இல்லை., இவ்வாக்கம் இஸ்லாமியர்கள் தளத்திலும் வெளியிடப்படவில்லை.


2.இப்பதிவு நேரடியாக தமிழ்மணம் எனும் திரட்டியை மட்டும் குறித்து வரையப்பட்ட பதிவு., ஆக இங்கு இஸ்லாமிய முகமனை முன்னிருத்தி பதிலிட அதுவும் இப்படி மோசமான சொல்லாடலை பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

     இப்பின்னூட்டம் குறித்து தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு, முஸ்லிம்கள் சார்பாக மெயிலிட்டு சகோதரர் ஆஷிக் அஹமத் (எதிர்க்குரல்)  விளக்கம் கேட்டும் அதற்கு பொறுப்பான பதில் சொல்லவில்லை., மாறாக தம் செய்கையை நியாயப்படுத்தி அவர்கள் கூறிய பதிலில் ஆணவ எழுத்துக்களே அதிகம் நிறைந்திருக்கிறது.,
(அவர்களுடன் நடைபெற்ற மெயில் உரையாடல் சான்றுகளும் இருக்கிறது)

      ஆக பதிவிற்கு தொடர்பில்லாமல் இஸ்லாமிய முகமன் பழிக்கப்பட்ட நிகழ்வுக்காக அந்த பெயரிலி சகோதரர் ரமணிதரன் இச்செய்கைக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும்.

   அதுமட்டுமில்லாமல் அங்கு உரையாடிய சக பதிவர்களையும் தமது எழுத்தால் அவமானப்படுத்தியும் இருக்கிறார்., ஆக நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் இட்ட பின்னூட்டத்திற்கு தமிழ் மணம் பொறுப்பாகாது என்று தமிழ் மணம் நிர்வாகம் சொன்னால் அதற்கு சரியான காரணம் சொல்லியாக தான் வேண்டும்., ஏனெனில் அத்தள பின்னூட்டத்தில் முடிவில்

On behalf of tamilmanam
-/tramanitharan, k.
(-/பெயரிலி.)

  என்றே எழுதி தாம் தமிழ்மணம் சார்பாக பின்னூட்டமிட்டிருப்பதாகவே சொல்லியும் இருக்கிறார்.ஆக அவரது பின்னூட்டத்திற்கும் தமிழ்மண நிர்வாகத்திற்கும் தொடர்பு இல்லையென்று சொன்னால் அதற்கு தமிழ்மணம் அப்போதே எதிர்பை அல்லது தம் மறுப்பை தெரிவித்து இருக்க வேண்டும்.,

   ஆக இச்செயல்பாடு தமிழ்மண நிர்வாகத்திற்கு தெரிந்தே தான் அரங்கேறியிருக்கிறது., ஆக இந்நிகழ்வுக்கு தமிழ்மணம் சரியான காரணம் சொல்ல வேண்டும் இல்லையேல்

   தனது அநாகரிக பேச்சால், அத்துமீறிய செய்கையால் ஆணவ போக்கால் தமிழர் மத்தியில் தமிழ்மணம் தரம் தாழ்வது போக போவது நிரந்தரம்., அத்தகைய இழிநிலை தமிழ்மணத்திற்கு ஏற்பட வேண்டாம் என்பதை வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன்.,


புரிந்துணர்வுடன் இனியாவது தமிழ்மணம் தம் ஒத்துழைப்பை தொடரட்டும்...
நன்றி.!





தமிழ்மணம் கவனிக்க தவறிய தமிழ் மனங்களின் வார்த்தைகளையும் கொஞ்சம் கவனியுங்க:)
(தமிழ் மனங்களின் மீது அக்கறை கொண்ட எல்லோரும் இதை ஏனையோருக்கும் பார்வேர்டு செய்வதற்கு வசதியாக)

1. சகோதரி அஸ்மா:
 http://payanikkumpaathai.blogspot.com/2011/10/blog-post_17.html
 

2. சகோதரர் குலாம்: 
http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html
 

3. சகோதரர் Faaique:
http://faaique.blogspot.com/2011/10/blog-post_16.html
 

4. சகோதரர் முஹம்மது ஆஷிக்: 
http://pinnoottavaathi.blogspot.com/2011/10/blog-post_17.html
 

5. சகோதரர் அப்துல் பாசித்:  
http://bloggernanban.blogspot.com/2011/10/remove-tamilmanam-vote-button.html
 

6. சகோதரர் ஹைதர் அலி:
 http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_16.html
 

7. சகோதரி ஆமீனா: 
http://kuttisuvarkkam.blogspot.com/2011/10/blog-post_17.html
 

8. சகோதரர் ஜமால்: 
http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html
 

9. சகோதரர் ரஜின்: 
http://sunmarkam.blogspot.com/2011/10/blog-post.html
 

10. சகோதரர் இளம் தூயவன்:  
http://ilamthooyavan.blogspot.com/2011/10/blog-post.html
 

11. சகோதரர் அந்நியன் 2 (அய்யூப்): 
http://naattamain.blogspot.com/2011/10/blog-post.html
 

12. சகோதரர் கார்பன் கூட்டாளி:  
http://carbonfriend.blogspot.com/2011/10/blog-post.html
 

13. சகோதரி ஜலீலா கமால்: 
http://samaiyalattakaasam.blogspot.com/2011/10/blog-post_17.html
 

14. சகோதரர் சிநேகிதன் அக்பர்:  
http://sinekithan.blogspot.com/2011/10/blog-post.html
 

15. சகோதரர் ஹாஜா மைதீன்: 
http://hajaashraf.blogspot.com/2011/10/blog-post.html
 

16. சகோதரர் HajasreeN:  
http://hajasreen.blogspot.com/2011/10/blog-post_17.html
 
17. சகோதரர் அரபுத்தமிழன்: 

18. சகோதரர் அப்துல் ஹகீம்:  
http://neermarkkam.blogspot.com/2011/10/thamil-manme-mannippukkeel.html
                                                   

    இறை நாடினால் இனியும் தொடரும்....

read more "தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!"

Wednesday, October 12, 2011

கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."

                                 ஓரிறையின் நற்பெயரால்
  • இந்த உலகத்தையும் அதில் உள்ள யாவற்றையும் படைத்தது கடவுளென்றால் அந்த கடவுளை படைத்தது யாரு...? 
      விவாத முடிவில் இறை ஏற்பாளர்களை நோக்கி நாத்திகர்கள் வீசும் இறுதி வார்த்தை ஆயுதம் தான் மேற்சொன்ன வாக்கியம்....
. . .
    விஞ்ஞானத்தை பொருத்தவரை எந்த ஒன்றையும் அதுவரை முடிவுற்ற நிகழ்வுகளின் வெளிபாட்டை அடிப்படையாக வைத்து ஊகங்களில் ஒன்றை உலகுக்கு சொல்லலாம். பின் அதன் நம்பக தன்மையில் குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவ்வுண்மை திரிபு அடைந்தாலோ பிறிதொரு (புதிய) அறிவியல் தெரிவுகளை மேற்கோளாக காட்டலாம்.
   
ஆனால் இஸ்லாத்தை பொருத்த வரை எந்த ஒன்றை விளக்குவதாக இருந்தாலும் விமர்சிப்பதாக இருந்தாலும் அவை குர்-ஆன் சுன்னாவில் கூறப்பட்ட விதத்திலேயே மேற்கோள் காட்டப்பட வேண்டும். அதனடிப்படையில் இஸ்லாமிய வட்டத்திற்குள்ளாக இருந்தே மேற்கண்ட தலைப்பை அணுகுவோம்.

கடவுளின் பிறப்பு..?
இறை நம்பிக்கையாளர்கள் வணங்கும் கடவுள் என்பவர் சர்வ வல்லமை பெற்றவராக -இணைத்துணை இல்லாதவராக - குறிப்பாய் யாராலும் பெற்றெக்கப்படாதவராக இருக்கவேண்டும் இதை இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த ஒன்றின் மூலமும் உருவாக்காத அல்லது எந்த ஒரு மூலத்திலிருந்தும் உருவாகதாக ஒன்றாக இருக்கவேண்டும்.

     அதாவது உயிரினங்களின் சிந்தையில் உதிக்கும் எண்ணம் கடந்து கடவுள் என்பவர் தோன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரை மனித பகுத்தறிவு கடவுளாக அதை / அவரை ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்நிலை மட்டுமே படைப்பினங்களை படைக்கும் நிகரற்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாளர் என்பவராகவும் அதை /அவரை காட்டும்.

  கடவுளை என்பதை /என்பவரை ஏற்றுக்கொள்ளும் நிலை இப்படியிருக்க படைப்பினங்களுக்கு உரிய செய்கைகளை உயரிய படைப்பாளனோடு எப்படி பொருத்த முடியும். ?

 மேற்கண்ட கேள்விகளை உற்று நோக்கினால்... இக்கேள்வியே நியாயமற்றது என்பதை விட அர்த்தமற்றது என்பது தெளிவாய் புரியும்
 
      கடவுளை படைத்தது என்று ஒன்று இருந்தால் கடவுள் என்பவர் படைப்பாளன் அல்ல மாறாக படைக்கப்பட்டவர் என்ற நிலையை அடைவார். அந்நிலையில் எப்படி படைக்கப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியும்.? அதுமட்டுமில்லாமல் கடவுளை படைக்கும் அதுவல்லவா "பெரிய"கடவுளாகி விடும். இந்நிலையிலும் மீண்டும் அதேக்கேள்வி இங்கேயும் தொடரத்தான் செய்யும். அந்த பெரிய கடவுளை படைத்தது யார் என்று..?

     ஆரம்பமும் இறுதியுமாக இருக்கும் இயங்கும்,  யாராலும் உருவாக்க முடியாத கடவுள் என்பவரை உருவாக்கியது யார்..? -என்று முரண்பாட்டில் மூழ்கிய ஒரு கேள்வியை முன்னிருத்தினால் எப்படி சரியான பதிலை தர முடியும். ஆக இங்கு சரியான பதில் தரவில்லையென்பதை விட சரியான பதில் தரும் பெறும் வகையில் கேள்வி அமைக்கப்படவில்லையென்பதே சரி..!


கடவுளின் இருப்பு..?


  கடவுளின் இருப்பு -மனித சமூகங்களுக்கு தெரியும் வகையில் அமைய வேண்டும் என்பது நியாயமான சிந்தனையா...? பார்ப்போம்


     ஒரு வாதத்திற்கு , கடவுள் என்பவர் பார்க்கும் பொருளாவோ அல்லது ஏற்கும் கருத்தாகவோ இருந்தால் அவரது இருப்பு எல்லோருக்கும் தென்படும் ஆக நமக்கிடையில் தெளிவாக தெரியும் அப்பொருள் அல்லது அந்த செய்கையை எத்தனைப்பேர் நம்மில் கடவுளாக ஏற்றுக்கொள்வார்கள்? ஒருவர் கூட கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

     ஏனெனில் நமக்கு தென்படும் ஒன்றின் இருப்பை கண்டிப்பாக வரையறை செய்ய முடியும். ஆக வரையறை செய்ய முடிந்த ஒன்றை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அதை சர்வ சக்தி பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆக வரையறை செய்ய முடியாத ஒரு உயரிய சக்தி மட்டுமே கடவுளாக இருக்க முடியும் என்பது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வாதம்.

மேலும் மனிதனால் இறைவனின் இருப்பை அறிந்துக்கொள்ள முடியாதென்பதை தர்க்கரீதியாகவும் விளக்(ங்)கலாம்.

          உதாரணமாக பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த முழு செய்கையும் மனிதன் தெளிவாக வரையறுத்து பதிந்து வைத்திருக்கிறான். எனினும் அவற்றின் ஊண் ,உறக்கம் என எல்லா பண்பியல் நிலைகளையும் ஆராய்ந்து அவற்றின் செயல்பாடுகள் முழுவதையும் துல்லியமாக அறிய குறிப்பிட்ட பறவையாகவோ அல்லது விலங்காகவோ மனிதன் மாற வேண்டிய அவசியமில்லை. ஆய்ந்தறியும் தன்மை மட்டுமே போதுமானது.

  ஆக ஒரு செயல் குறித்த தகவல்களை முழுவதும் திரட்ட மனிதன் அச்செய்கையாக காட்சியளிக்க தேவையில்லை. ஆனால் இதே நிலை ஒப்பிட்டு நிலையில் கீழாக அதே பறவையினம் அல்லது விலங்கினம் மனிதன் குறித்த எல்லா தகவல்களையும் அதே உயிரின வளர்ச்சியிலிருந்து துல்லியமாக பெற முடியாது., மனிதனின் சில செயல்களை சில பறவை மற்றும் விலங்குகள் உணர்ந்தாலும் பொதுவாக எல்லா உயிரினங்களின் சிந்தனையாலும் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளையும் துல்லியமாக கணிக்க முடியாது.,

  மாறாக கலவியல் ரீதியாக இன்பம் பெறுவதிலும், உணவிட்டலிலும், இன்னபிற தன்னின் சமூகம் சார்ந்த செயல்களில் மட்டுமே அவைகளின் கவனம் இருக்கும் மாறாக மனிதன் கண்டறிந்த முற்போக்கு ரீதியான அறிவியல் கண்டுப்பிடிப்புகளை குறித்து அறிந்திருக்க முடியாது என்பதை விட அதுக்குறித்த சிந்தனை அவைகளுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.,

   மனிதனை விட ஆய்வு ரீதியாவும் அறிவு ரீதியாகவும் சிந்தனை செய்வதில் பலஹீன படைப்பாக அத்தகைய உயிரினங்கள் இருப்பதே இதற்கு காரணம்.

   ஆக இங்கு படைப்பினங்களின் படைப்பு நிலைக்கேற்ப அளவிலேயே சிந்திக்கும் திறனுடன் ஏனைய திறன்களும் வேறுப்படும். ஆக ஐந்தறிவு உயிரினங்களின் சிந்தனையானது, பகுத்தறிவு என்ற ஓரறிவு கூடுதலாக கொண்ட மனித சிந்தனை தாண்டி எப்படி செயல்பட முடியாதோ., அதுப்போல மனித சிந்தனையை மிகைத்து செயல்படும் ஒன்றை மனிதனால் அறிந்துக்கொள்ள முடியாது என்பதும் தெளிவு!

    அதனடிப்படையில்,
  • மனிதன் உட்பட ஏனைய உயிரினங்களின் செயல் திறத்தை முழுவதும் வடிக்கும், 
  •  எந்த ஒன்றின் ஆரம்பம் மற்றும் இறுதி நிலையையும் தீர்மானிக்கும் அறிவுமிக்க மனிதனை விட அளவிட முடியா அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை திறனையும், 
  • எண்ணிடலங்காத தெரிவுகளையும் உள்ளடக்கிய கடவுள் எனும் ஒட்டுமொத்த உலகின் செய்கைகளை நிர்ணயிக்கும் ஒரு மூலத்தின் இருப்பை மனிதர்கள் சிந்தனையில் உருவான ஆய்வறிவில் கொண்டு வர முயற்சிப்பது எப்படி பொருந்தும்?????
 ஆக கடவுளின் இருப்பை உணர்த்தும் குறீயிடுகள் மனிதனுக்கு அறிமுகமான வகையில் இருக்க அவசியமில்லை என்பதை விட அவனின் இருப்புக்குறித்து அறிய மனிதனுக்கு தகுதி இல்லை என்பதே மிக்க பொருந்தும்., ஆக
எதையும் மறுப்பதற்கல்ல ஏற்பதற்க்கே வேண்டும் பகுத்தறிவு..!


படைப்பினங்களுக்கு முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது.  (02:255)

                                                           அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

read more "கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்.""

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்