
"ஸாரி ரொம்ப பிஸி...."
இந்த ஏழெழுத்து வார்த்தை - எல்லா பிரச்சனைகளுக்கும் தலைவாசலாக இருப்பதை நம்மில் பலர் அவ்வபோது மறந்து தான் தொலை(க்)கிறோம். பேசவேண்டியவர்களிடம் பேசாமல் இருப்பது, பேச வேண்டியதை அந்நேரத்தில் பேசாமல் இருப்பது. இரண்டுமே ஒருவர் உறவில் விரிசலை ஏற்படுத்த போதுமான ஆயுதம்.
கணவன், மனைவியோடு, மனைவி கணவனோடு, இருவரும் சேர்ந்து பிள்ளைகளோடு பேசுவதற்கு கூட டைம் டேபிள் போட்டு வைத்திருக்கும் காலக்கட்டம். அதிலும் குடும்பத்தோடு சேர்ந்து ஒன்றாய் வெளியே போகவேண்டுமென்றால்... சொல்லவே வேணாம் அது வருடத்திற்கு ஒருமுறை வரும் பண்டிகையாக தான் இருக்கும்.
இப்படி இல்லற வாழ்வில் கூட இடைவெளி விட்டு தான் இயலாமையை நிரப்பிக்கொண்டிருக்கிறோம். அண்டை வீட்டுகாரர் பெயர் கூட அறியாதவர்கள் நம்மில் பலர். அட..! அடுத்த வீட்டின் டோர் எண் கூட நமக்கு தெரிவதில்லை என்பது ஆச்சரியமான வருத்தம். தெருவை கடக்கும் பொழுதுகள் கூட கவனமாய் யாரிடமும் பேசாமல் செல்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறோம். பிஸி என்ற ஒற்றை வார்த்தையில் மகிழ்ச்சியின் பாதியை இழந்துக்கொண்டிருக்கிறோம்
இப்படி மனித உறவுகளை மறந்துக்கொண்டிருப்பதற்கு கூட ரெடிமேடு காரணம் நம்மிடம் ரெடியாக தான் இருக்கிறது.! யாருங்க பிஸி... கொஞ்சம் வரலாற்றை புரட்டி பாருங்க... ...
மதினாவின் மன்னர்!
இறைவனின் இறுதித்தூதர்!!
இருப்பெரும் இன்றியமையாத பொறுப்பு!
மக்களை எப்படி வழி நடத்துவது? இறைவனை எப்போது தியானிப்பது? யோசிக்க மறக்க கூட நேரங்கள் இல்லை அவர்களிடம். கடிகாரம் இல்லா காலத்தே நேரங்களை கடன் வாங்க கூடிய நேரமது. இருப்பீனும் அவரவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் அனைத்தையும் நேர்பட செய்தவர் மாநபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம். அவர்களை விடவாக நீங்களும், நானும் பிஸி .?
அந்த மாமனிதர் வீதியில் செல்லும் போது சிறுவர்களைக் கண்டால் அவர்கள் முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு சலாம் கூறுவார்கள். (நூல் : புகாரி 6247)
வீதியில் செல்லும் மனிதர்களிடம் நின்று அரை நிமிடம் பேசுவதென்பது கின்னஸில் இடம்பெற செய்யும் காரியம் நம்மைப்பொருத்தவரை. அதிலும் சிறுவர்களுக்கு முந்திக்கொண்டு சலாம் உரைப்பதென்றால்...? இவ்விடத்தில் கேள்விக்குறிகளை மட்டும் தான் அதிகப்படுத்திட முடியும்.
இன்னும் பாருங்கள்., ஒரு சிறு வயது சஹாபி கொடுக்கும் ஸ்டேட்மெண்ட் இது, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவர்களாகிய எங்களுடன் கலந்து பழகுவார்கள். எனது தம்பி அபூ உமைரிடம் 'உனது குருவி என்ன ஆனது?' என்று விசாரிப்பார்கள்." (நூல் : புகாரி 6129)
இரத்த பந்தங்களுக்கு கூட வாரத்திற்கு ஒரு முறை மிஸ்டு கால் கொடுத்து தவணை முறை பாசத்தை இன் கம்மீங் காலில் தான் வழங்கிக்கொண்டிருக்கின்றோம். ஈருலக தலைவர் வீதியில் விளையாடும் சிறுவர்களுக்கு சலாம் உரைக்கிறார், அவர் வளர்க்கும் குருவியின் நிலைக்குறித்து நலம் கேட்கிறார் என்றால்...
யோசித்து பாருங்கள்...
அதனால் தான்
அகிலத்தின்
அருட்கொடை
அவர்கள்...
-இன்ஷா அல்லாஹ் வளரும்
Tweet | |||||
No comments:
Post a Comment
ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!