"உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”
வைரம் பதிக்கப்பட்ட ஏட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய மேற்கண்ட வார்த்தைகளை இங்கே முன்மொழிந்தது 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு முற்போக்கு சிந்தனையாரளோ, பெண்ணியம் குறித்து பெருமை பேசும் சமூக ஆர்வலரோ அல்லர்.
தம்மை தவிர மற்ற மனிதர்களை மாக்களாக கருதிக்கொண்டிருந்த மக்கள் மத்தியில், வாழ்ந்த ஒரு மனிதர் சொல்லி இருக்கிறார் என்றால் நம்மால் ஆச்சரியத்தின் விளிம்பிற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை...
உலகில் எத்தனையோ செயல்கள் செய்வதன் மூலம் தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்வர்கள் உண்டு. ஆனால் பொதுவெளியில் சிறந்த மனிதர்கள் என பெயர் பெற்றவர்கள் தம் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்களா என்பது சந்தேகமே...
இங்கு நபி முஹம்மத் அவர்களோ, ஒருவன் சிறந்தவனாக இருப்பதற்கு அடிப்படை அவன் மனைவியிடத்தில் நற்பெயர் பெற வேண்டும் என்கிறார்கள். இது பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பதோடு மட்டுமில்லாமல் பெண்களை அஃறிணை பொருளாக பயன்படுத்திய சமூக சூழ்நிலையில் சொல்லி இருப்பது எத்தகைய முற்போக்கான சிந்தனை.
கலாச்சாரம், நாகரிகம், சுந்தந்திரம் என பெண்களுக்காக குரல் கொடுக்கும் இந்த காலத்திலும் இப்படியான ஒரு வாக்கியத்தை எந்த சிந்தனைவாதியும் முன்மொழியவில்லையென்பது சிந்திக்க தகுந்த ஒன்று!
மனிதக்குல மேன்மைக்காக மட்டுமே தங்கள் வாழ்வை அற்பணித்த அந்த மாமனிதர் அரசியலாகட்டும், ஆன்மிகமாகட்டும், குடும்ப பொருளாதரமாகட்டும் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக வாழ்ந்து உலகிற்கு பாடம் புகட்டினார்கள். வெறுமனே ஏட்டில் மட்டும் வடித்து தங்கள் வாழ்வை மனம் போன போக்கில் அமைத்துக்கொள்ளவில்லை அந்த மாமனிதர்!
தலையில் எண்ணெய் தேய்ப்பதிலிருந்து காலில் செருப்பு அணிவது வரை இன்று வரையிலும் ஒரு சமூகம் அவர்கள் சொன்னதை, செய்ததை அவர்கள் அங்கீகாரம் கொடுத்ததை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறதென்றால் அவர்கள் மனித மனங்களில் ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு உண்மையானது, வலிமையானது என்பதை நேர்பட சிந்திக்கும் எவராலும் புரிந்துக்கொள்ள முடியும்
எப்பொழுதாவது, தான் சொன்னதை செய்த தலைவர்களுக்கு மத்தியில் எப்பொழுதும் தான் சொன்னதை மட்டுமே செய்து வாழ்ந்தவர்கள் மாநபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
அதனால் தான்
அகிலத்தின்
அருட்கொடை
அவர்கள்...
-இன்ஷா அல்லாஹ் வளரும்
Tweet | |||||
No comments:
Post a Comment
ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!